- Advertisement -
1971-ம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் பின்னணி பாடகியாக சினிமாவில் அவதரித்தவர் பாடகி வாணி ஜெயராம். மியான் மல்ஹார் என்ற இந்தி பாடல் தான், அவர் பாடிய முதல் பாடல். அவரது அறிமுக பாடலே பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அவரகு காந்தர்வ குரலுக்கு ரசிகர் பட்டாளமும் உருவானது என்று சொல்லலாம். இந்தியில் ஹிட் அடித்த வாணியை, தமிழின் பக்கமும் இழுத்து வந்தனர் தமிழ் இயக்குநர்கள். தமிழ் பக்கம் திரும்பிய அவர் தமிழ்மொழி மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்தார். அனைத்து மொழி படங்களிலும் அவர் பாடல்கள் பாடி ரசிகர்களை கிறங்கடித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். மேலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களையும் அவர் பாடியுள்ளார். தமிழில் அவரது குரலில் வெளியான மேகமே மேகமே, மல்லிகை என் மன்னன் மயங்கும், என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் ஏன் கேட்கிறது, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. இந்தி ரசிகர்களால் அவர் வாணி அம்மா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். மேலும், சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்கள் மற்றும் தனி ஆல்பங்களிலும் அவர் பாடியிருக்கிறார்.




