குக்கர் சின்னம் தராததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.


தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து அதிமுகவினரால் 5,000 – 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியாது. இரட்டை இலை சின்னத்திற்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. எம்ஜிஆரிடமும் ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாகாக இருந்தது.ஜூலை 11 பொதுக்குழுவுக்கு பிறகு இரட்டை இலை சின்னத்துக்கான செல்வாக்கு குறைந்துவிட்டது. இரட்டை இலையை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது ஊரறிந்த உண்மை. தவறானவர்களின் கையில் இரட்டை இலை சின்னம் உள்ளது.
இரட்டை இலை ஈபிஎஸ்ஸை சார்ந்து இருக்குமேயானால் தமிழ்நாட்டில் செல்வாக்கை இழக்கும். ஏனென்றால் அதிமுகவை ஒரு பிராந்திய கட்சியாக எடப்பாடி பழனிச்சாமி கொண்டு சென்றுவிட்டார். நிதி ஆதாரத்தை கொடுத்தாலும் இரட்டை இலை சின்னத்தை வைத்து ஐந்தாயிரம் பத்தாயிரம் வாக்குகள் மட்டுமே பெற முடியும் இவர்களால் வெற்றி பெற முடியாது.
குக்கர் சின்னம் தராததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை. தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் நிர்பந்திக்கவில்லை. குக்கர் சின்னம் ஒதுக்க முடியாததை முன்பே கூறியிருந்தால் உச்சநீதிமன்றம் சென்றிருப்போம்” எனக் கூறினார்.
