ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, கோணவாய்க்கால் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய ஆ.ராசா, “சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை, பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தனித்தன்மை இழக்க மாட்டாம் என சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், பாஜகவின் அடிவருடியாக இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை ஆதரித்தார். கலைஞர் பேனா வைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இலவச மின்சாரத்திற்கு கையெழுத்து போட்டது கலைஞர் பேனா. மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்சா ஒழித்தது கலைஞர் பேனா.
எடப்பாடி பழனிசாமி, வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோர் கல்விபெற காரணமானது கலைஞர் பேனா. கலைஞர் பேனா இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார். இதற்கு சிலை வைக்க எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் ஊழல் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறிய ஜெயலலிதாவிற்கு 79 கோடியில் நினைவு சின்னம் அமைத்தது ஏன்?
எடப்பாடிக்கும் ஓபிஎஸ்க்கும் எஜமானராக இருக்கும் மோடியையே நாடாளுமன்றத்தில் ஓட விட்டது திமுக. ஆனால் அதிமுகைவை பார்த்து திமுக பயப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மோடிக்கு பாடம் புகட்டும் வாய்ப்பு ஈரோடு மக்களுக்கு கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். கை சின்னத்திற்கு வாக்களித்து ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்களியுங்கள்” எனக் கூறினார்.
