பணிக்கு சேர்ந்து பத்து ஆண்டுகளில் எந்த வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதினை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த விதமான தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் விருது வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கி வருகிறார்.


இதில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவில் பணிபுரியும் 192 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 167 காவல் ஆளினர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 91 காவல் ஆளிநர்கள், அதேபோன்று நுண்ணறிவு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு கப்பல் பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு, குற்ற ஆவண காப்பகம், பணியிடை பயிற்சி மையம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 79 காவல் ஆளிநர்கள், இதேபோன்று ரயில்வே நுண்ணறிவு பிரிவு, குற்றப்பிரிவு புலனாய்வு துறை, பொருளாதார குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, குற்றம் மற்றும் சிறப்பு அதிரடிப்படை, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம், காவல் பயிற்சி கல்லூரி, பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வுத்துறை, மாநில குற்ற ஆவண காப்பகம், கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் செயலாக்கம் ஆகிய பிற பிரிவுகளில் பணிபுரியும் 216 காவலர்கள் என மொத்தமாக 753 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.


