சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து சாந்தோம் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் நொச்சிக்குப்பம் லூப் சாலையை அகலப்படுத்தி வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.


இந்த லூப் சாலையில் நொச்சிக்குப்பம், டுமிங் குப்பம், ராஜீவ் காந்தி நகர், செல்வராஜபுரம், முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர், சீனிவாசபுரம், நொச்சி நகர் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண நொச்சிக்குப்பம் லூப் சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் 10 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மீன் மார்க்கெட் தங்களுக்கு தேவையில்லை எனவும், தற்போது உள்ளதை போன்றே சாலையிலேயே மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நொச்சிக்குப்பம் லூப் சாலையில் சாலையை ஆக்கிரமித்து மீன் மார்க்கெட் நடத்தி வருவதால் பீக் ஹவர்ஸில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அவர்களை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடைகளை நடத்திக்கொள்ள மயிலாப்பூர் துணை ஆணையர் உத்தரவாதம் அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர், ஷேக் அப்துல் ரகுமான் காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு கடைகளை நடத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


