பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி ஜூலை 11ல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனிநீதிபதி, ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்தது. பழனிசாமி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
இருநீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 11ம் தேதி ஒத்திவைத்திருந்தது. மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. அதிமுகவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தீர்ப்பு மூலம் உறுதியாகியுள்ளது. அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் பூஜ்ஜியமாக இருக்கும். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் தவிர யார் அதிமுகவுக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். பன்னீர்செல்வம் நியமித்த நிர்வாகிகள் பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்வார்கள்” எனக் கூறினார்.
