பல்வேறு தடைகளைத் தாண்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இதில் அரசு உயர் அதிகாரிகள் பலர் முதலமைச்சருடன் இணைந்து படம் பார்த்தது தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


குடும்பத்துடன் பங்கேற்ற IAS, IPS அதிகாரிகள்
சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள NFDC தாகூர் திரைப்பட மையத்தில், நேற்று மாலை 6 மணியளவில் முதலமைச்சர் விஜய் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தனிப்பட்ட முறையில் பார்வையிட்டார்.

இந்தச் சிறப்புத் திரையிடலில் முதலமைச்சரின் பெற்றோர்கள் மற்றும் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா ஆகியோருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார், முதலமைச்சரின் தனிச் செயலாளர் செந்தில்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் உள்ளிட்ட பல முக்கிய IAS மற்றும் IPS அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு படம் பார்த்தனர். படம் நிறைவடைந்ததும் முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
சமூக ஆர்வலர்களின் விமர்சனம்
ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதோ அல்லது கோயிலுக்குச் செல்வதோ ஒரு தனிநபரின் சொந்த விருப்பம் சார்ந்த விஷயமாகும். ஆனால், அரசு உயர் அதிகாரிகள் தங்களுடைய அன்றாட அலுவல் பணிகளைப் புறந்தள்ளிவிட்டு, முதலமைச்சர் நடித்த திரைப்படத்தைப் பார்ப்பதையே தங்களது அதிகாரப்பூர்வப் பணியில் ஒன்று போலக் காட்டிக் கொண்டு பங்கேற்றிருப்பது பொதுமக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
