தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசியக் கொடி, தேசிய கீதத்திற்கு இணையான சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்க மத்திய அரசு முடிவு!
மத்திய உள்துறை இணையமைச்சர் இந்த ‘தேசிய கௌரவப் பாதுகாப்பு (திருத்த) மசோதாவை’ (Prevention of Insults to National Honour (Amendment) Bill) மாநிலங்களவையில் முறைப்படி தாக்கல் செய்தார். தேசியப் பாடலுக்கு உரியச் சட்டப்பூர்வமான பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்
தற்போதுள்ள தேசிய கௌரவப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுச் சட்டமாக மாறும் பட்சத்தில், தேசிய கீதத்திற்கு வழங்கப்படும் அதே சட்டப்பூர்வ அந்தஸ்தும் மரியாதையும், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் கிடைக்கும். இதன் மூலம், பொது இடங்களிலோ, எழுத்து அல்லது பேச்சு மூலமாகவோ, அல்லது வேறு எந்த வகையிலோ ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வரும் நிலையில், தேசியப் பாடலை அவமதிக்கும் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிப்பதற்கும் வழிவகை செய்யப்படும். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரியச் சட்டப் பாதுகாப்பை வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா, நாடாளுமன்ற வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
