தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது
அதன்படி, வரும் ஆக.20 முதல் அக்.18ம் தேதிவரை, வீடுவீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வரும் அக்.29ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதன்பிறகு அக்.29ம் தேதி முதல்
நவ.28ம் தேதிவரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் வரும் டிச.24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
எனவே, அக்.29 முதல் நவ 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் , திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.
அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதன்படி, நவம்பர் 9,10,23,24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, படிவங்களை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.