2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து 67 இடங்களை பெறுவதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும், அண்ணாமலையை கட்சியில் தக்க வைப்பதற்காக அமித்ஷா அந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் உள்ளிட்ட முக்கிய அரசியல் நிகழ்வுகளின் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவருடைய அடுத்தக்கட்ட நகர்வு என்பது, எடப்பாடியை நம்பி செங்கோட்டையனுக்கு பயனில்லை. எனவே பொதுச்செயலாளர் ஆக முடியுமா?, அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்று செங்கோட்டையன் பார்க்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தால், அரசியல் அரங்கத்தில் அவர் ஒரு தலைவராக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. செங்கோட்டையன், அமித்ஷா – நிர்மலா சீதாராமனை நம்பிதான் அவர் இதை செய்கிறார்.
முக்குலத்தோர் சமுதாய மக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ளனர். தேவர் ஜெயந்தி அன்று, எடப்பாடியின் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த செங்கோட்டையன் போய் நிற்கிறபோது, அவரை முக்குலத்தோர் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறார். அவருடைய விருப்பம் என்பது, பொதுச் செயலாளர் வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது, தன்னை பொதுச் செயலாளர் ஆக்க அந்த சமூகத்தினர் ஆதரவு அளிப்பார்கள் என்று நினைக்கிறார்.

செங்கோட்டையன் விவகாரத்தை பாஜக தொகுதி பங்கீட்டிற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே பாஜக எடுக்கும் முடிவுகளை பொருத்து செங்கோட்டையன் அடுத்தக்கட்ட முடிவுகளை எடுக்கலாம். பாஜக தரப்பில் தங்களுடைய 11 சதவீதம் வாக்குகளுக்கு தகுந்த இடங்களை அதிமுக தர வேண்டும் என்று உறுதியாக உள்ளது. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கிவிடுவார் என்கிற அச்சம் உள்ள நிலையில், அவரை கட்சியில் தக்க வைப்பதற்காக தற்போது 67 இடங்கள் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். பைஜெயந்த் பாண்டா, சுகாதர் ரெட்டி போன்றவர்கள் 67 இடங்களை கேட்கிறார்கள்.
மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் தொடர்ச்சியாக திமுகவை நோக்கி செல்கின்றனர். ஸ்டாலின், 45 சதவீதம் வாக்குகளுடன் உறுதியாக இருக்கிறார். அவர் தான் அடுத்த முதலமைச்சர் ஆவார் என்று இவர்கள் எல்லாம் உறுதியாக நம்புகிறார்கள். மேலும், எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்ற தான் முயற்சிக்கிறார். ஆட்சிக்கு வர முயற்சிக்கவில்லை என்று செங்கோட்டையன், அன்வர் ராஜா போன்றவர்களுக்கு தெரிகிறது. எனவே அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்கள்.

ஓபிஎஸ் அணியில் இடம்பெற்றிருந்த மனோஜ் பாண்டியன், திமுகவில் இணைந்ததற்கு காரணம் ஓபிஎஸ், சசிகலாவை சந்தித்து பேசியது தான். சசிகலா குடும்பத்திற்கும், பி.ஹெச். பாண்டியன் குடும்பத்திற்கும் நீண்ட காலமாகவே பிரச்சினை உள்ளது. சசிகலா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது அவருக்கு எதிராக பி.ஹெச். பாண்டியன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சசிகலா மீண்டும் ஜெயலலிதா உடன் சேர்ந்ததும், பி.ஹெச்.பாண்டியன் குடும்பம் ஓரங்கட்டப்பட்டது.
தற்போது ஆலங்குளம் தொகுதியில போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கும் என்பதாலும், ஓபிஎஸ் சசிகலா உடன் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாலும் மனோஜ் பாண்டியனை திமுகவை நோக்கி செல்ல வைத்திருக்கிறது. இதேபோல் இன்னும் பல அதிமுக எம்எல்ஏக்கள் வரும் நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திராவிட இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று திமுகவில் சேர வாய்ப்புகள் உள்ளன. வேலுமணி, தங்கமணி, செம்மலை போன்ற மூத்த தலைவர்கள், எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்க விரும்புவார்கள்.

திமுகவில் சாமிநாதன், பொன்முடி ஆகியோருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அமைதியான அரசியல்வாதியான மு.பெ.சாமிநாதனை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. பொன்முடிக்கு தண்டனை காலம் முடிந்த பிறகு மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த பகுதியில் வன்னியர் அல்லாதவர்களின் வாக்குகளை பெறுவதற்கு பொன்முடி தேவை என்பதால், பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வேலூர் பகுதியில் துரைமுருகன் மகனுக்கு 2 தொகுதிகளை வழங்கி, வன்னியர்களின் வாக்குகளை பெற முயற்சிக்கிறார்கள். ஸ்டாலின், எம்ஜிஆரை போன்று சாதி அரசியலை நுணுக்கமாக செய்கிறார்.
கொங்கு மண்டல அரசியல் என்பது, மற்ற பகுதிகளில் உள்ள அரசியலை விட மாறுபட்டது. அதை உணர்ந்து தான் ஸ்டாலின், சில விஷயங்களை செய்கிறார். எடப்பாடியை, செந்தில் பாலாஜி போன்ற கொங்கு வேளாளர் சமுதாயத்தினரை வைத்துதான் பலவீனப்படுத்த முடியும் என்று நினைக்கிறார். அது சரியான கணக்குதான். கதிர் ஆனந்த்-க்கு பதவி கொடுத்திருப்பது என்பது ஸ்டாலின் மீது இருக்கும் வன்னியர்களுக்கு எதிரானவர் என்கிற குற்றச்சாட்டை உடைப்பதற்காக தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


