2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதை விட, அதிமுகவை பலவீனப்படுத்துவது தான் பாஜவின் பிரதான நோக்கமாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித்ஷா, அண்ணாமலை ஆகியோரது கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில் இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பாஜகவினர் சொல்வதன் நோக்கம் அதிமுகவை பலவீனப்படுத்துவது ஆகும். மற்றொன்று அதிகாரத்திற்கு வர வேண்டும் என்கிற அவர்களின் விருப்பமாகும். அதில் தவறு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தாங்கள் வளர்வதற்காக அரசியல் தளம் இருப்பதாக பாஜகவினர் உறுதியாக நம்புகிறார்கள். மேலும் மேலும் அதிமுகவை பலவீனப்படுத்துவது. அதிமுகவின் இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை தாங்கள் நிரப்புவது என்பது பாஜக திட்டமாகும். பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் தண்டிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் அதிகாரத்தில் பங்கு கேட்பது என்பது தவறானது கிடையாது.
அதிமுகவை எவ்வளவு சீர்குலைக்க முடியுமோ அவ்வளவு சீர்குலைப்பார்கள். எடப்பாடி பழனிசாமி, என்.டி.ஏ ஆட்சி. ஆனால் ஆட்சியில் பங்கு கிடையாது என்று புது விளக்கம் கொடுத்தார். மதுரை வந்த அமித்ஷா, பாஜக – அதிமுக ஆட்சி என்று இரு முறை சொன்னார். இவர்களுக்கு எல்லாம் மேலாக அண்ணாமலை, பாஜக ஆட்சிதான் என்று சொல்லிவிட்டார். இந்த அண்ணாமலைதான் எடப்பாடி தலைமையில் என்.டி.ஏ ஆட்சி அமையும் என்கிறபோது அமைதியாக உட்கார்ந்து இருந்தார். எவ்வளவு தூரம் அதிமுகவை சிறுமைப்படுத்த முடியுமோ, அவ்வளவு தூரம் சிறுமைப்படுத்த வேண்டும். அதிமுகவின் அரசியல் தளத்தை எவ்வளவு தூரம் கைப்பற்ற முடியுமோ, அவ்வளவு தூரம் கைப்பற்ற வேண்டும். அதுதான் பாஜகவின் நோக்கம். அதை திறம்பட செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி அடி மட்டத்தில் ஜெல் ஆகாது. இந்த கூட்டணி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்.
அமித்ஷா, அண்ணாமலை போன்றவர்கள் கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி என்று சொல்கிறார்கள். அதேவேளையில் தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் எடப்பாடி தான் தங்களின் தலைவர் என்று மாற்றி சொல்வார்கள். கொஞ்சம் நாள்கள் கழித்து கூட்டணி தொடர்பாக அமித்ஷா கருத்துதான் இறுதியானது என்று சொல்வார்கள். அதிகாரத்தில் பங்கு குறித்தும் அமித்ஷா கருத்து தான் இறுதியானது என்பார்கள். மற்றொருபுறம் அண்ணாமலை, பாஜக ஆட்சிதான் என்று சொல்வார்கள். ஒடிசா, டெல்லியில் ஆட்சியை பிடித்தது போன்று தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அமித்ஷா சொல்கிறார். 2026ல் தேர்தலில் ஒருவேளை திமுக ஆட்சி வீழ்த்தப்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜகவின் ஆட்சியாக தான் இருக்கும். அமித்ஷா வெளிப்படையாகவே பேசுகிறார். ஒடிசாவிலோ, டெல்லியிலோ இருப்பது என்.டி.ஏ அரசாங்கம் கிடையாது. அது பாஜவின் அரசாங்கம். அப்போது அதிமுகவை கூடி அழிக்கிறது பாஜக. ஏற்கனவே இந்த கூட்டணி ஜெல் ஆகவில்லை. அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோன்ற பேச்சுக்கள் கூட்டணியை இன்னும் பலவீனப்படுத்தும். 1996ல் ஜெயலலிதா – நரசிம்மராவ் கூட்டணி எப்படி மண்ணை கவ்வியதோ அதுபோல இந்த கூட்டணி மண்ணைக் கவ்வும்.
அண்ணாமலைக்கு அதிமுக – பாஜக கூட்டணி பிடிக்கவில்லை. எடப்பாடி முதலமைச்சர் ஆவதை அவர் விரும்பவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தனக்கு ஒரு ரோல் இருக்கும் என்று நினைக்கிறார். பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியதை அவர் ஏற்கவில்லை. அதனால் உள்ளுக்குள் இருந்து கூட்டணியை கெடுக்கின்ற வேலையை செய்கிறார். அதை பாஜகவின் ஒரு பகுதி அனுமதிக்கிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை அழித்தது போன்று, அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள். தமிழக பாஜகவில் தான் ஒரு முக்கியமான நபர் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் அண்ணாமலை சொல்லிக்கொண்டே இருக்கிறார். நயினார் வந்த பிறகும் பாஜக – அதிமுக கூட்டணி வலுவடையவில்லை. இந்த கூட்டணி ஜெல் ஆகவே இல்லை. குறைந்தபட்சம் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கி, 2026 தேர்தல் வரையாவது அவரை தமிழ்நாட்டிற்கு வெளியே அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டிற்குள்ளே சுற்றி வருகிறார். திமுகவின் இரண்டாவது இன்னிங்சுக்கு அவர்கள் வழி வகுக்கிறார்கள்.
2026ல் பாஜகவின் திட்டம் என்பது திமுகவை வீட்டிற்கு அனுப்புவது கிடையாது. அதிமுகவை மேலும் பலவீனப்படுத்துவது ஆகும். 2026ல் அதிமுக ஆட்சியை பிடிக்காவிட்டால் மிகவும் மோசமான நிலைக்கு போகும். அதை உறுதிப்படுத்துவோம் என்கிறார். எதிர்வரும் தேர்தலில் பாஜக குறைந்தபட்ச சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றாலும் பரவாயில்லை. ஆனால் அதிமுக கீழே விழ வேண்டும். அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்ற போது இனி தமிழ்நாடு களம் திமுக Vs அதிமுக என்று இருக்காது. திமுக Vs பாஜக என்றுதான் இருக்கும் என சொன்னார். தற்போது சொல்கிறார் கூட்டணி ஆட்சி இல்லை. பாஜக ஆட்சி என்று. அவர் தனது முடிவில் தெளிவாக இருக்கிறார். பாஜக மேலிடம் அதை அனுமதிக்கிறது. அவர்களின் முதன்மையான நோக்கம் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். தற்போதைய நோக்கம் என்பது அதிமுகவை முடிந்த அளவுக்கு பலவீனப்படுத்த வேண்டும். அண்ணாமலை நோக்கம் என்பது அதிமுகவின் வாக்கு வங்கியை காலி செய்வதாகும். அண்ணாமலை அப்படி பேசினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு யார் வாக்கு அளிப்பார்கள். அதிமுக பாஜகவிடம் சரணடைந்துள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
அதிமுகவிடம் ஆயிரம் குறைகள் இருப்பினும் அது ஒரு மதச்சார்பற்ற கட்சியாகும். இன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் பெரும்பான்மை மதவாதம் புகாத கடைசி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. திமுக – அதிமுக ஆயிரம் தவறுகள் செய்தாலும், அடிப்படையில் அவர்கள் மதச்சார்பற்ற கட்சிகள். திருப்பரங்குன்றம் போன்ற ஒரு நிகழ்வை கலைஞரோ, ஜெயலலிதாவோ, ஸ்டாலினோ, எடப்பாடியோ யாராக இருந்தாலும் நடைபெற விட மாட்டார்கள். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாததாகும். அப்போது, இந்த சமுதாய கட்டமைப்பை உடைக்கும் வேலைகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவுக்கு வேறு வழியில்லை. அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள். கடைசி நேரத்தில் கூட்டணியை பாஜக கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்பு கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.