நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை மாநில அரசு ஒடுக்கி வருவதாகவும், தமிழகத்தில் செயல்படும் த.வெ.க அரசு பாஜகவின் கிளைப் பிரிவு போலச் செயல்படுகிறது என்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


போராட்டத்தை ஒடுக்கும் மாநில அரசு:
“முன்னர் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர் தான் இன்றைய முதலமைச்சர் விஜய். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களின் போராட்டத்தை அவரே ஒடுக்குவது ஏன்? மத்திய பாஜக அரசு ஒடுக்குமுறையை ஏவுகிறது என்றால், அவர்களுக்கு ஈடாக மாநில அரசும் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. தமிழகத்தில் த.வெ.க அரசு, பாஜகவின் கிளைப் பிரிவு போலச் செயல்பட்டு வருகிறது.”
சுகாதாரக் கட்டமைப்பைச் சீரழிக்கும் முயற்சி:
“நீட் தேர்வு முறை மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் என்று வாதிடுவது தவறானது. நீட் தேர்வு அறிமுகமாவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த தேர்ச்சி முறையின் கீழ் படித்து உருவானவர்கள் சரியான மருத்துவர்கள் இல்லையா? இன்று நாடு முழுவதும் உள்ள சுகாதாரக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடிப்பதே அவர்கள்தான். நீட் தேர்வு என்பது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பையே சீரழிக்கக் கூடிய ஒன்றாகும்.
நீட் முறைகேடுகள் தொடர்பாக தர்மேந்திர பிரதான் இதுவரை தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகவில்லை. இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக செய்யப்படும் கண்துடைப்பு நடவடிக்கைகளே தவிர, வேறொன்றும் இல்லை.”
காங்கிரஸ் மற்றும் முதலமைச்சரின் நிலைப்பாடு குறித்த விமர்சனம்:
“கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவிடாமல் தடுத்தது காங்கிரஸ் கட்சிதான். அந்த காங்கிரஸைக் கூடவே வைத்துக்கொண்டு மாநிலச் சுயாட்சி பற்றியோ அல்லது கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றோ பேசுவது எந்த விதத்தில் சரியாகும்?
ஒருபுறம் நாடு முழுவதும் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மறுபுறம் முதலமைச்சரோ ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதைவிட மோசமான நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது” என்று இடும்பாவனம் கார்த்திக் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
