spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமுருக பக்தர்கள் மாநாடு: நெருக்கடியில் அதிமுக! இபிஎஸ் வாழ்த்து அவசியமற்றது! உடைத்துப்பேசும் லட்சுமி சுப்ரமணியம்! 

முருக பக்தர்கள் மாநாடு: நெருக்கடியில் அதிமுக! இபிஎஸ் வாழ்த்து அவசியமற்றது! உடைத்துப்பேசும் லட்சுமி சுப்ரமணியம்! 

-

- Advertisement -

ஆர்எஸ்எஸ், பாஜக உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மிகவும் நெருக்கமுடன் இருந்து வருகின்றனர். அனைத்து தரப்பினருக்குமான கட்சியான அதிமுக முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றது அந்த கட்சிக்கு நெருக்கடி தான் என்று பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது சர்ச்சையாகிய நிலையில், இது தொடர்பாக பத்திரியாளர் லட்சுமி சுப்பிரமணியன் பிரபல யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- அதிமுக  – பாஜக கூட்டணி என்பது கொள்கை கூட்டணியே கிடையாது. தேர்தலுக்காக, அதுவும் கட்டாயப்படுத்தி அதிமுக கூட்டணியில் இணைக்கப்பட்டது. இது வெட்டவெளிச்சமாக அனைவருக்கும் தெரிந்ததே. அதிமுக, தங்களைவிட்டு சிறுபான்மையினர் வெகு தூரம் போய்விட்டார்கள். அவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று சொல்வது அபத்தமாகும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இஸ்லாமிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு சென்றுவிட்டன. ஆனால் கடந்த தேர்தலில் கூட எஸ்.டி.பி.ஐ கட்சி, அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தது. அதிமுகவுக்கு இஸ்லாமியர் வாக்குகளில் ஒரு பகுதி கிடைத்தது என்பது உண்மையாகும். இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விருந்தினர்களாக தான் சென்றிருந்தார்கள். அதனால் அண்ணா, பெரியார் தொடர்பான அவதூறுகளுக்கு எதிர்வினை ஆற்றவில்லை என்று அதிமுக தலைமை சொல்லியுள்ளது. அப்படி என்றால் ஏன் மாநாடு முடிந்து, வந்த பிறகு சமூக வலைதளங்கள் மூலம் தங்களின் எதிர்வினையை வெளிப்படுத்தி இருக்கலாம். இல்லாவிட்டால் எடப்பாடி தரப்பில் இருந்து அறிக்கை விட்டிருக்கலாம்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவசர அவசரமாக பதற்றத்தோடு வந்து நான் ஆர்.எஸ்.எஸ் கொண்டாட்டத்திற்கு போகவில்லை. சாந்தலிங்க அடிகளாரின் நூற்றாண்டு விழா கூட்டத்தில் பங்கேற்பதற்காக தான் அங்கு சென்றேன். அந்த நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத் வந்திருந்தார் என்று சொல்கிறார். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்போடும், பாஜகவோடும் அதிமுக தலைவர்கள் மிகவும் நெருக்கமாகவே உள்ளனர். இதில் எங்கே முரண்பாடு வருகிறது என்றால் 2004ல் பணமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தபோதும், அதன் பிறகு ஆடு கோழிகளை பலியிடக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தபோதுதான் ஜெயலலிதா மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். 1996 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் 2004ல் தான் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். அதற்குபிறகு தான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு செய்ய மாட்டேன் என்று சொல்லி, அந்த சட்டங்களை திரும்பப் பெற்றார். நாங்கள் மத மாற்றத்திற்கு எதிரானவர்கள் கிடையாது என்பதை 2004ஆம் ஆண்டில் அதிமுக அந்த சட்டத்தை திரும்ப பெற்றதன் மூலம் நிறுவினார்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த இந்து முன்னணி அவதூறு பரப்பும் விதமாக வீடியோ திரையிடப்பட்டதை விட்டுவிடலாம். ஆனால் அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதி மொழி என்பது ஆபத்தானது. தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதமாற்றம் அதிகம் உள்ளது. அப்படி செய்தால் நாங்கள் கேள்வி கேட்போம். அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அந்த மாநாட்டில் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. ஆனால் வெளியே வந்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டிருக்கலாம். அல்லது அதிமுக சார்பில் அறிக்கை விட்டிருக்கலாம். அல்லது வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தது போன்று சந்தித்து பேசி இருக்கலாம். முன்னாள் அமைச்சர்கள், செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா போன்றவர்கள் அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஆவர். குறிப்பாக அவர்கள் தென் மாவட்டங்களின் முக்கிய முகமாக உள்ளனர். அவர்கள் எதற்காக இந்து முன்னணி மாநாட்டிற்கு விருந்தினராக செல்ல வேண்டும். கூட்டணி கட்சியான பாஜகவின் மாநட்டிற்கு அவர்கள் விருந்தினராக செல்லலாம். ஆனால் இந்து முன்னணி மாநாட்டிற்கு எதற்காக விருந்தினராக செல்ல வேண்டும்? இந்த முருக பக்தர்களின் மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியதே தேவையற்றது.

முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் அதிமுக – பாஜக தொண்டர்கள் ஜெல் ஆகிவிட்டனர் என்று சொல்வது தவறானது. கீழ் மட்டத்தில் இன்னும் கூட்டணி ஜெல் ஆகவில்லை. தலைமை அளவில் தான் கூட்டணி ஜெல் ஆகியுள்ளது. கடந்த முறை தமிழகம் வந்தபோது அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்கிறார். அது குறித்து இன்று வரை அதிமுவினரால் விளக்கம் தர முடியவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக பங்கேற்றது என்பது அந்த கட்சிக்கு நெருக்கடி தான். ஏனென்றால் அதிமுகவை பொறுத்தவரை அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் தொண்டர்களாக உள்ளனர். ஆனால் பாஜகவில் ஒரு இஸ்லாமியரோ, கிஸ்தவரோ எம்.எல்.ஏ ஆகவோ, எம்.பி. ஆகவோ இருக்க மாட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ