பாட்டாளி மக்கள் கட்சியை தின்று செரிப்பது தான் பாஜகவின் திட்டம். அதற்கான 60 சதவீத வேலைகளை அந்த கட்சி பார்த்துவிட்டது என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் மோதலின் பின்னணி மற்றும் அன்புமணியை இயக்கும் நபர்கள் குறித்து திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- அன்புமணி ராமதாஸ் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். அய்யா வழியில் தான் நடப்போம். ஆனால் அதிகாரம் எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால் ஐயா உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் செயல் தலைவர்தான் என்று சொல்கிறார். ஐயா வழியில் செயல்படுவது என்றால் நீங்கள் செயல் தலைவராக செயல்படுவது ஒன்று தான் வழியாகும். ராமதாஸ் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இந்த பிரச்சினைக்கு எல்லாம் ஒரே தீர்வு, நான் அறிவித்ததை போல செயல் தலைவராக இயங்குவேன் என்று அன்புமணி சொல்லிவிட்டு தொடர்ந்து இயங்கட்டும். பாமகவின் தலைவராக நான் இயங்குகிறேன் என்கிறார். அவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்ட பிறகு நீங்கள் மாவட்ட செயலாளர்கள், உங்கள் ஆதரவாளர்களை எல்லாம் கூப்பிட்டு கூட்டம் போடுவதற்கே உரிமை இல்லை என்பது நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய செய்தி. ஆனால் நீங்கள் அவருக்கு சவால் விடுகிறீர்கள். அன்புமணி தனது நிலைப்பாட்டை அறிவிக்க முடியாமல் காத்திருக்கிறார். அவர் டெல்லியின் சிக்னலுக்காக காத்திருக்கிறார்.
அன்புமணி, தான் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். தனக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சொல்கிறார். இதே பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர் தானே ஜி.கே.மணி? அவர் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று லீட் எடுத்திருந்தால்? ஜி.கே.மணிக்கு எந்த அதிகாரமும் இல்லை. நிறுவனராக இருந்த ராமதாசுக்கு தான் அதிகாரம். பாமகவின் கட்சி விதிகளில் நிறுவனருக்கு தான் அதிகாரம் உள்ளது. கட்சி தலைவருக்கு அவ்வளவாக அதிகாரம் வழங்கப்படவில்லை. பொதுக்குழு கூட்டத்தையோ, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையோ கூட்டுகிற போது, நிறுவனரின் கருத்து என்ன என்று கேட்டுதான் தலைவர் முடிவு எடுப்பார். அன்புமணி டெல்லியிடம் கோரிக்கையை வைத்து விட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடக்கிறது. உங்களை நம்பிதான் நான் இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் அதன்படி செய்கிறேன் என்கிறார். அப்போது, காத்திருங்கள் உங்கள் அப்பா என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு சொல்கிறோம் என்று பதில் அளித்துள்ளனர்.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று அறிவிக்கிறபோது, தனக்கு தான் பொதுக்குழுவின் மூலம் நியமிக்கப்பட்டிருக்கிற அதிகாரம் உள்ளது, நான் தான் தலைவர் என்று சொன்னார். அடுத்தக்கூட்டத்தில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று சொல்கிறார். அப்போது பிரச்சினையை தேர்தல் ஆணையத்தில் கொண்டுபோய் விடப் போகிறேன் என்று அன்புமணி சொல்கிறார். அங்கு கொண்டுபோய் விட்டால் என்ன நடக்கும் என்றும், அது யாருடைய அழுத்ததின் கீழ் இயங்குகிறது என்றும் எல்லோருக்கும் தெரியும்.
அதிமுகவை எப்படி தேர்தல் ஆணையத்தில் கொண்டுபோய் விட்டு எப்படி கட்ட பஞ்சாயத்து பேசி, டேபிளுக்கு கீழே டீலிங்கை முடித்தார்கள். அதே டீலிங்கிற்கு இப்போது வந்துவிடுவார்கள். கட்சியை யார் உருவாக்கியது. கட்சியின் கட்டமைப்பு யாரிடம் உள்ளது. இதெல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. தேர்தல் ஆணையத்தின் தயவும், சொற்பமான அதிகாரமும் கையில் இருந்துவிட்டால் போதும் பாஜகவோடு உட்கார்ந்து பேசி ஒரு செட்டில்மென்ட்டிற்கு வந்து கட்சியை கைப்பற்றி விடலாம் என்கிற எண்ணம் எல்லாருக்கும் தெரிந்துள்ளது. அப்படிபட்ட சூழலில் அன்புமணி தேர்தல் ஆணையத்தை காட்டி பேசுவதன் மூலம் டெல்லி இயக்குகிறது என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இன்னும் கொஞ்சம் நாட்களில் ராமதாசை பாமகவின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ராமதாசை நீக்குவார்கள். அதன் பிறகு பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கூட்டுவார்கள். அப்போது இனி அனைத்து அதிகாரங்களும் தலைவருக்கு தான். நிறுவனருக்கு அதிகாரம் இல்லை என்று மாற்றுவார்கள். அப்போது ஐயா வழியில் பயணம் என்று சொல்வார்கள். அப்படி சொன்னால் மட்டும் தான் பாமக என்கிற கட்சியை நடத்த முடியும். தற்போது அனுதாபத்தை ஏற்படுத்தும் வேலைகளை தான் அன்புமணி செய்துக்கொண்டிருக்கிறார். ராமதாஸ் பிரச்சினை வருகிறபோது எல்லாம் இன்டிகேஷன் கொடுத்துக்கொண்டே இருந்தார். புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில், விருப்பம் இருந்தால் இரு. இல்லாவிட்டால் போ என்றார். 2வது இன்டிகேஷன் நான்தான் இந்த கட்சியை உருவாக்கினேன். எனக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சொன்னார். இறுதியாக ஒரு இன்டிகேஷன், எல்லா விஷயத்தையும் பத்திரிகையாளர் முன்பு சொல்ல முடியாது. அப்படி பேச வேண்டிய நிர்பந்தம் ஏறபட்டால் நான் பேசுவேன் என்று ராமதாஸ் சொல்கிறார்.
மருத்துவர் ராமதாஸ் அன்புமணிக்கு வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் மீறி தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொணடு, நிர்வாகிகள் தன்பக்கம் நிற்பதால் கட்சியே தன்னிடம் இருப்பதாக அன்புமணி நினைக்கிறார். நிறைய நிர்வாகிகள் உங்களோடு வரலாம். ஆனால் ராமதாஸ் நடத்தியதை போல கட்சியை உங்களால் நடத்த முடியுமா? நீங்கள் கட்சியை நடத்த முடியாது என்பதற்கான சான்றுதான் 2014 முதல் 2025 வரை., உங்களின் ஆளுமை வந்ததற்கு பின் பாமக சந்தித்துள்ள சரிவுகள். தொடர் வெற்றிகளை குவித்த கட்சியை, தொடர் தோல்விகளை சந்திக்க வைத்துள்ளீர்கள். அப்போது கட்சியை நடத்துகிற திறமை இல்லை என்பதை நீங்களே நிரூபித்து விட்டீர்கள். இந்த விவகாரத்தில் பாஜக எதை சொல்கிறதோ அதை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்கிற நிலையிலிருந்து காத்திருக்கிறார் அன்புமணி என்றுதான் நான் பார்க்கிறேன்.
ராமதாஸ் அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர். கலைஞரின் மனநிலையும் அவருக்கு புரியும். ஜெயலலிதாவின் அரசியலும் அவருக்கு புரியும். மருத்துவர் ராமதாஸ் ஆக்டிவ் பாலிடிக்ஸ் 2010ஆம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு ஆக்டிவ் பாலிடிக்ஸ்க்கு வரவில்லை. தான் இயங்கவில்லையே தவிர கட்சியை இயக்குகிற ஆற்றல் அவரிடம் இருந்தது. ராமதாஸ் அளவுக்கு ஏன் அன்புமணியால் அரசியல் செய்ய முடியவில்லை என்றால் அவர் சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், திருமா, வைகோ போன்ற தலைவர்கள் எல்லாம் அனைத்து நிலைகளிலும் மக்களை சந்திக்க கூடிய தலைவர்களாக இருப்பார்கள். ஆனால் அன்புமணி எங்கே சென்று எந்த மக்களை சந்தித்துள்ளார்? இதுதான் அன்புமணிக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் உள்ள வித்தியாசம். அவர் கொல்லைப்புற வழியாக மாநிலங்களவைக்கு சென்றவர். கொல்லைப்புற வழியாக மத்திய அமைச்சரானவர். கொல்லைப்புற வழியாக பாமக தலைவரானவர். ராமதாசின் மகன் என்கிற ஒன்றை தவிர அந்த கட்சிக்கும், வன்னிய மக்களுக்கும் ஏதாவது ஒன்றை அன்புமணி செய்துள்ளாரா?.
அதிமுக வலு இழந்து போய் உள்ளது. அந்த கூட்டணி பெரிய அளவில் கை கொடுக்காது. ஆனாலும் அந்த கட்சியுடன் ஏன் பாஜக கூட்டணி வைத்துள்ளனர். என்ன காரணம்? அந்த கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக தின்று செரித்துவிடலாம் என்று தான். அப்போது பாமகவையும் சேர்த்து சாப்பிட்டுவிடுவார்கள். பாமகவை, பாஜக அழிக்காமல் விடாது. அதற்கான 60 சதவீத பணிகளை செய்து முடித்து விட்டார்கள். பாஜக உடன் கூட்டணி வைக்க ராமதாசுக்கு, அன்புமணி அழுத்தம் கொடுத்துள்ளார். ஒரு கட்சியை கூட்டணிக்கு கொண்டுவருவதற்கு பாஜகவினர் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறார்கள். தாயாரின் மீது பாட்டிலை வீசினார் அன்புமணி என்று ராமதாஸ் சொல்கிறார். ஆனால் அன்புமணி, தனக்கு எல்லாம் அம்மா தான் என்று சொல்கிறார். இருவரில் யார் சொல்வது உண்மை என்று சரஸ்வதி அம்மாள் தான் சொல்ல வேண்டும்.
தற்போது ராமதாஸ் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அரசியலில் இப்படி ஒரு சூழல் எந்த ஒரு அரசியல் தலைவர்களுக்கும் வரக்கூடாது. இப்படி ஒரு சூழல் வருகிறபோது நிச்சயமாக அவர்களால் சேர்ந்து பயணிக்கிற நிலை வராது. ஆனால் அப்பா, மகன் எப்போதும் சேர்ந்து விடலாம். ராமதாஸ் ஒரு வித அச்ச உணர்வோடு தான் பேசினார். அன்புமணி பொதுக்குழுவை குறுக்கிடுகிறார். கட்சியின் நிறுவனர் பேசுகிறபோது அன்புமணி குறிப்பிடுகிறார். வன்னியர்கள் வணங்கத் தக்க வகையில் தெய்வ நிலையில் உள்ளவர் ராமதாஸ். அவர்களுக்கு முன்னதாகவே ராமதாசை அவமதிக்கும் விதமாக அன்புமணி தன்னை பனையூர் அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள் என்று சொல்கிறார். அவரது நடவடிக்கை மூலம் இனிமேல் ராமதாஸ் பிம்பத்தையும் பாதுகாக்க முடியாது. அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக ராமதாசால் அன்புமணியின் இமேஜையும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.