மதுரையில் நடைபெற்றது முழுக்க முழுக்க பாஜகவின் அரசியல் மாநாடு. அதற்கு முருக பக்தர் மாநாடு என்கிற சாயம் பூசப்பட்டுள்ள என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு குறித்தும், இந்த மாநாட்டிற்கு அதிமுக ஆதரவளித்ததன் பின்னணி குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துபவர்கள் குன்றத்தை காப்போம், கோவிலை காப்போம் என்று சொல்கிறார்கள். என்ன காரணத்திற்காக எந்த குன்றத்திற்கு இடைஞ்சல் வந்துவிட்டது? என்ன காரணத்திற்காக எந்த கோவிலுக்கு பிரச்சினை வந்துவிட்டது? என்பது குறித்து பாஜகவினர் சொன்னால் சரியாக இருக்கும். திமுக என்பது ஒரு பகுத்தறிவு கட்சியாகும். ஆனால் திமுகவின் ஆட்சி என்பது, அனைத்து தரப்பு மக்களின் மத உணர்வுகளையும் மதித்து ஆட்சி நடத்துகிறது. அரசு பல்வேறு கோவில்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்தியுள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மீட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்களுக்கு வரலாறு தெரியாது.
அறநிலையத் துறையை கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் உருவாக்கவில்லை. ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களான நீதிக்கட்சியை சேர்ந்த பக்திமான்கள், கோவில்களில் கடவுள் என்கிற பெயரில் எத்தகைய சுரண்டல்கள் நடைபெறுகிறது என்பதை கண்டு, மனம்பொறுக்காமல் கோவில்களுக்கு வரும் வருமானம் குறித்து மக்களுக்கு வெளிப்படையாக தெரிய வேண்டும். இடைத் தரகர்கள் அதனை சுருட்டிக்கொண்டு போகக்கூடாது என்பதற்காக தான் அறநிலையத்துறை ஏற்படுத்தினார்கள். அரசியலில் மதத்தை கலப்பது என்பது மிகவும் ஆபத்தானது ஆகும். ஆனால் பாஜகவினர் அதை ஆபத்தாக நினைக்க வில்லை. பாபர் மசூதியை இடித்ததால் தங்களுக்கு ஆதரவு பெருகியது. ராமரை வைத்து வடநாட்டில் அரசியலை வளர்த்தோம். இங்கே முருகனை கையில் எடுத்துள்ளோம் என்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் என்பது அங்கு மூன்று வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது. வெள்ளைக்காரர்கள் காலத்தில் பிரீவியூ கவுன்சிலுக்கு சென்று தீர்வு காணப்பட்டுவிட்டது.திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று திமுக சொல்கிறது என அமித்ஷா அப்பட்டமாக பொய் சொல்கிறார். முன்பு பூரி ஜெகநாதர் கோவில் கருவறை சாவி தமிழ்நாட்டில் உள்ளது என்று பேசினார்கள். இந்த நாட்டின் பிரதமர் இப்படி பேசினார் என்றால் யார் மீது நமக்கு மரியாதை இருக்கும்? ஆனால் அப்படி பேசுவது பற்றி அவர்களுக்கு தயக்கம் ஏதும் கிடையாது. அவர்கள் நேரத்திற்கு தகுந்தாற்போல் நிலைப்பாட்டை மாற்றி மாற்றி பேசுவார்கள்.
தமிழுக்கு ஒரு பெருமை என்றால் அதை அழிக்க நினைக்கின்றனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளை வெளியிட சொன்னால், அதில் குறுபடிகள் செய்து அறிக்கையை வெளியிட்டனர். கீழடி அகழாய்வு தொடர்பான அமர்ந்த் ராமகிருஷ்ணனின் அறிக்கையை ஏற்க மாட்டோம் என்கிறார்கள். தமிழர்களிடம் எதிர்ப்பு எழுந்ததால், நாங்கள் தர ஆய்வுக்காக அனுப்புகிறோம் என்கிறார்கள். எந்த வகையிலும் தமிழர்களுக்கு பெருமை இருந்தால் அழிக்கத்துடிக்கும் பாஜகவினர் தான் முருகனை பாதுகாக்க போகிறார்களா?
தமிழக அரசு சார்பில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியது மிகவும் சரியான முடிவாகும். பாஜகவினர் கோவையில் தங்களுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். அதனால் தான் செந்தில் பாலாஜியை பிடித்து இவ்வளவு தொல்லைகளை செய்தனர். செந்தில் பாலாஜி அங்கே இருந்தால், பாஜகவின் வெற்றி சாத்தியப்படாது என்பதால் தான் அவருக்கு அச்சறுத்தல் அளித்ததாக நம்பப்படுகிறது. அடுத்து மதுரை பக்கம் வருகிறார்கள். பாஜகவினர் அனைத்துவிதமான சூழ்ச்சிகளையும், ராஜதந்திரங்களையும் செய்கிறார்கள். நயினார் நாகேந்திரன் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பாஜவின் மாநில தலைவராக நியமிப்பதால் மதுரை பகுதிகளில் கட்சியை வளர்க்கலாம் என்று பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் குருட்டுத்தனமாக எதையும் நம்பி செல்வது கிடையாது. பக்தியோடு இருப்பதால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்ல முடியாது. இவர்கள் யார்? இவர்களின் வரலாறு என்ன? என்று பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஆட்சியை பிடிப்பதற்காக கலவரம் செய்வது உள்பட என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பாஜகவினரிடம் அரசியல் நேர்மை என்பதே கிடையாது. அது தவறானது.
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு போன்றவர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுவாக அதிமுக – பாஜக என இரண்டு கட்சிகளுக்கும் எந்த வகையிலாவது திமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். திமுக பலவீனமாகும் என்று நம்பியதால், அதிமுக பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது இறுதியான திட்டம் கிடையாது. திராவிடம் என்கிற பெயரில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை செயல்படுத்தி வருவது திமுக மட்டும்தான்.
தமிழ்நாட்டிற்கு என்று ஒரு அரசியல் பாரம்பரியம் உள்ளது. இங்கே ஏழை, எளிய மக்களை அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக வலிமைமிக்கவர்களாக ஆக்க வேண்டும் என்று தெளிவாக இருந்த கட்சிகள் தான் இன்று வரை ஆட்சி செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், திமுகவின் அண்ணா, கலைஞர் போன்றவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டனர். அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் வாக்கு அரசியலுக்காக ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டனர். இந்த சூழ்நிலையை நாசப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் கொள்கையாகும்.
பாஜக – ஆர்எஸ்எஸ் இன்று வரை சதுர்வர்ண முறையை பின்பற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் இந்தியாவை ஆள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் ஒரு கொள்கை பிரகடனமானவே அறிவித்துள்ளனர். அப்போது கொள்கை ரீதியாக திமுக அவர்களுக்கு மிகப்பெரிய தடைக்கல் ஆகும். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது பாஜகவின் முதல் இலக்கு ஆகும். அதன் பின்னர் திமுக, திராவிடர் கழகம், நீதிக்கட்சி உருவாக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி என்கிற கருத்தியலை முற்று முழுதாக பயன் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். அதிமுக – பாஜவின் உடனடி நோக்கம் என்பது ஆட்சியில் இருந்து திமுகவை நீக்கிவிட வேண்டும். அதற்காக இருவரும் ஒன்று சேர்கிறார்கள். திமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக என்ன செய்தாலும் அவற்றை எல்லாம் எடப்பாடி ஆதரிக்க தான் செய்வார்.
இன்றைக்கு மாநாடு போடுகிற பாஜக முருகனுக்காக என்ன செய்திருக்கிறது?. தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஏதாவது பாஜக குரல் எழுப்பியதா? இது முழுக்க முழுக்க அரசியல் மாநாடுகும். இதற்கு முருகன் மாநாடு என்று சாயம் பூசியிருக்கிறார்கள். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முருகன் தான் தன்னுடைய கடவுள் என்று சொன்னாரா? அவருக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு உள்ளது? இதில் இருந்தே இவர்களின் நோக்கம் என்ன என்பது தெரிகிறது. ஆந்திர துணை முதல்வர், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்ததில் அரசியல் முக்கியத்துவம் இருக்கலாம். மத முக்கியத்துவம் என்ன உள்ள? அவர் முருகனை வழிபடுபவர் கிடையாதே, இவ்வாறு அவர் தெரிவித்தார்.