ஜனநாயகன் திரைப்படத்திற்கு பாஜக தான் காரணம் என்று விஜய் வெளிப்படையாக சொல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு ஆதரவாக பேசுவது ஏற்புடையது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தரப்பில் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரம், ஆவணக் கொலை போன்றவற்றுக்கு தான் விஜய் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது அவருடைய சொந்த படத்திற்கே பிரச்சினை வந்தது குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த படம் தள்ளிப்போனதற்கு சதி தான் காரணம் என்று சொல்கிறார்கள். இதேபோல் கரூர் சம்பவத்திற்கும் சதி கோட்பாடு சொன்னார்கள். அன்றைக்கு அதற்கு காரணம் யார்? என்று தவெகவினர் சொன்னார்கள். சென்சார் போர்டில் பாஜகவால் நியமிக்கப்பட்ட நபர்கள் தான் உள்ளனர். வித்யாபாலன், கௌதமி போன்றவர்கள் அந்த குழுவில் உள்ளனர். அவர்கள் பார்த்து விட்டு படத்தை ரிவியூ கமிட்டிக்கு அனுப்பியுள்ளனர். அதனால் படம் வெளியீடு தாமதமாகி உள்ளது. இதன் மூலம் பாஜகதான் இதற்கு பின்னால் உள்ளது என்பதை தவெகவினர் சொல்ல பயப்படுகிறார்கள். அவர் ஒரு நடிகராக இருந்து படம் தள்ளிப்போயிருந்தால் பேசு பொருளாகி இருக்காது. அவர் அரசியல்வாதியாகி விட்டதால் பேசு பொருளாகி விட்டது. தன்னுடைய கூட்டத்திற்கு வருபவர்களை விஜயால் பாதுகாக்க முடியவில்லை. தற்போது படத்தையும் அவரால் வெளியிட முடியவில்லை. இது விஜய்க்கு நெருக்கடியாகும்.

ஜனநாயகன் படத்தை தீபாவளிக்கு கொண்டுவந்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. பொங்கலுக்கு வெளியிட்டு அதை பேசு பொருளாக்கி தேர்தலில் அரசியல் லாபம் பார்க்கலாம் என்று விஜய்க்கு வியூகம் சொல்லித்தரப்பட்டு இருக்கலாம். ஆனால் அதனால் எதிர்வரும் பிரச்சினைகளை யூகித்து இருக்க வேண்டும். திரைப்படத்தில் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய விஜய், நிஜ அரசியல்வாதிகள் முன்பு காணாமல் போய்விட்டார். இதுதான் அரசியல். அரசியலுக்கு நடிகர் வருகிறபோது, அதற்கு அவர் தன்னை அரசியல் மயப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் என்ன என்ன பிரச்சினை ஏற்படுத்துவார்கள் என்று தொடர்ந்து விஜய் கணிக்க தவறுகிறார். ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு அவர் சார்ந்த சினிமா துறையில் இருந்தே ஆதரவு கிடைக்கவில்லை. காரணம் விஜய் திரைத்துறையில் பிரச்சினை ஏற்படும்போது அதற்கு யாருக்கும் ஆதரவாக பேசியது கிடையாது. ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளனர். திமுகவை தீய சக்தி என்று விஜய் சொல்லும் நிலையில், அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அவரை ஆதரிப்பது என்ன மாதிரியான அரசியல்.

ராகுல்காந்தி, நெருப்பை கொளுத்திவிட்டு விளையாடுகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு 100 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளபோது இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து கட்சித்தலைமை ஒரு முடிவு எடுக்க வேண்டும். காங்கிரசில், திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்பவர்களில் எத்தனை பேருக்கு தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் செல்வக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தனித்து போட்டியிட்டால் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அதுவும் பட்டியல் இனத்தவர், ஓபிசி என்று மூன்று அமைச்சர்கள் சொல்கிறார்கள். அமைச்சர் பதவிக்கு இடஒதுக்கீடு முறை என்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், அறிவாலயத்தில் சண்டை போடுவதாலோ, விஜய்க்கு ஆதரவாக ட்வீட் போடுவதாலோ வர முடியாது. நீங்கள் மக்களிடம் சென்று வாக்கு கேட்டால் தான் அது சாத்தியமாகும். ஜனநாயகன் படம் வெளியாவதற்கு பாஜக தான் காரணம் என்று விஜயே சொல்லவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள். விஜயோ, செங்கோட்டையனோ அப்படி எல்லாம் நிச்சயம் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.

தங்களின் கட்சியின் பிரச்சினைக்கு தவெகவினரே குரல் கொடுக்க தயாரில்லை. மோடி சர்கார் மீது அவர்களுக்கு அவ்வளவு பயம் உள்ளது. சர்கார் படம் எடுத்தால் போதாது. சர்காரை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். மற்றொன்று ஜனநாயகன் படத்திற்காக விஜய் கேள்வி கேட்டால், அடுத்து கரூர் கூட்டநெரிசல் வழக்கின் விசாரணைக்காக செல்கிறபோது பிரச்சினை ஏற்படலாம். நான் நிறைய முறை சொல்லியிருக்கிறேன், விஜய் திமுக மீது விமர்சனம் வைக்கிறார். அவர்களும் அடிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல் எல்லோரும் சேர்ந்து அடித்தால் விஜய் நிலை என்னவாகும்? அதை விஜய் கொஞ்சம் கொஞ்சமாக உணருவார். மற்றொன்று சிபிஐ விசாரணைக்கு சம்மன் அனுப்பியிருப்பது சதி என்று சொல்கிறார்கள். சதி என்றால், விஜயை கைது செய்வதாகும். அவர்கள் விசாரணைக்கு தான் ஆஜராக சொல்லி உள்ளனர். மற்றொன்று விஜய் ஜனவரி 12ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு செல்ல மாட்டார். பின்னர் ஆஜராக நேரம் கேட்பார் என்றும் சொல்கிறார்கள். அப்படி செய்வது அவருக்கு தான் பிரச்சினையை ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில் அவர் ஆஜராகமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


