இந்தியாவில் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாடு பரவலாகி வரும் நிலையில், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் நுகர்வோர் நீதிமன்றம் ஒன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. E20 பெட்ரோல் பயன்படுத்தியதால் தனது புதிய காரின் என்ஜின் பழுதாகிவிட்டதாக வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கில், கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகிக்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
பாதிக்கப்பட்ட உரிமையாளருக்குப் புதிய கார்
சமீபத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் ‘கிராண்ட் விட்டாரா’ (Grand Vitara) காரை வாங்கிய நுகர்வோர் ஒருவர், சந்தையில் கிடைக்கும் E20 பெட்ரோலைத் தனது காரில் பயன்படுத்தியுள்ளார். இதனால் காரின் என்ஜின் முற்றிலும் செயலிழந்து (Engine Damage) பழுதானது. இது குறித்து ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை முழுமையாக விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளருக்கு மாருதி சுசூகி நிறுவனம் உடனடியாகப் புதிய காரை வழங்க வேண்டும் என அதிரடியாக ஆணையிட்டது.

கார் நிறுவனத்தின் அலட்சியத்திற்கு நீதிமன்றம் கண்டனம்
தற்போது சந்தையில் E20 பெட்ரோல் பயன்பாடு பெருமளவில் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், விற்கப்படும் குறிப்பிட்ட வாகனம் E20 பெட்ரோல் எரிபொருளுக்குத் தகுதியானதுதானா? இல்லையா? என்பதை வாடிக்கையாளருக்குத் தெளிவாக விளக்க கார் தயாரிப்பு நிறுவனம் தவறிவிட்டது என்று நுகர்வோர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தாதது நிறுவனத்தின் சேவை குறைபாடே என்றும் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

நஷ்டஈடு விபரங்கள்
மன உளைச்சலுக்கான இழப்பீடு: கார் பழுதானதால் உரிமையாளருக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்குச் செலவு: நீதிமன்றப் போராட்டத்திற்கான செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் காரின் உரிமையாளருக்கு வழங்க மாருதி சுசூகி நிறுவனத்திற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் E20 எரிபொருளால் பாதிக்கப்பட்ட வாகனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ஒன்று தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவது இதுவே முதல்முறை என்பதால், இந்தத் தீர்ப்பு கார் சந்தையிலும், வாகன ஓட்டிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
