சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 600 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


சிறு நகை வியாபாரியான கமலேஷ், ராகேஷ் ஜெயின் என்ற இடைத்தரகர் மூலம் சவுகார்பேட்டையில் நகைகளை வாங்கி விற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் ராகேஷ் ஜெயின், பரூக் என்பவரின் கடையில் 1,350 கிராம் நகை வாங்கியுள்ளார். அதை கமலேஷ் அனுப்பிய நபரிடம் ராகேஷ் ஜெயின் கொடுத்துள்ளார். ஐந்து நிமிடத்தில் பணத்தை தருகிறேன் என சொன்ன நபர் அதன் பிறகு மாயமாகிவிட்டார். அப்போதுதான் கமலேஷ் திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ராகேஷ் ஜெயின் அளித்த புகாரின்பேரில், கடந்த மூன்று மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு தலைமையிலான தனிப்படை போலீசார், ராஜஸ்தானை சேர்ந்த கமலேஷ், சென்னை சவுகார்பேட்டையில் வசிக்கும் லலித், அமித் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.


