அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு- ஆர்.பி.வி.எஸ் மணியன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அம்பேத்கர், திருவள்ளுவர், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை இழிவாகப் பேசியதற்காக ஆர்.பி.வி.எஸ் மணியன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் RBVS மணியன்( வயது 76). இவர் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத்தலைவர். ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 11ம் தேதி தியாகராய நகர் தணிகாசலம் சாலையில் ஒரு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமேதை அம்பேத்கர், அய்யன் திருவள்ளுவர் பற்றி அவதூறாக பேசியதுடன், வர்ணாசிரமத்தை உயர்த்தி பிடிக்கும் வகையிலும், பட்டியல் சமூகத்தை இழிவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இது தொடர்பாக மாம்பலம் போலீசார் மணியன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பொது அமைதியை கெடுத்தல், இரு தரப்பிடையே பகைமையை உருவாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தியாகராய நகர் ராஜம்பாள் தெருவில் உள்ள வீட்டில் மணியனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.