சென்னை மெரினா கடற்கரையில் பாரம்பரிய உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து அரங்குகளை பார்வையிட்டார்.

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த உணவுத்திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உணவுத் திருவிழாவானது இன்று தொடங்கி வருகின்ற 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த திருவிழா நடைபெறும்.உணவுத் திருவிழாவில் மொத்தம் 45 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பாரம்பரிய உணவுகள், கிராமிய உணவுகள், சைவம் மற்றும் அசைவ உணவுகள், சிறுதானிய உணவுகள், இனிப்பு வகைகள், தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான உணவுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 அரங்குகளில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படும்.
சென்னை மெரினா கடற்கரை மணற் பரப்பில் பொதுமக்கள் கலை நிகழ்ச்சியை காண்பதற்காக பெரிய திரைகளும், அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் உள்ளே வருவதற்கு ஒரு வழியும், வெளியேற ஒரு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்து பாரம்பரிய உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்தனர். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த கைவினை பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.