சென்னை திருவொற்றியூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில், அவர் தல நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் நேர்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக்குச் சென்று திரும்பும்போது நேர்ந்த விபத்து
சென்னை ஏர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் திருநிறைச்செல்வி. இந்நிலையில், மகேந்திரன் தனது மகள் திருநிறைச்செல்வியை அழைத்துக் கொண்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, சிகிச்சை முடிந்து இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

வாகனம் திருவொற்றியூர் – எண்ணூர் விரைவுச் சாலையில் உள்ள எல்லையம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி – இந்தக் கொடூர விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட திருநிறைச்செல்வி மீது லாரியின் சக்கரம் ஏறியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், உயிரிழந்த திருநிறைச்செல்வியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுச் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஓரே வாரத்தில் நிச்சயதார்த்தம்: கண்ணீரில் குடும்பத்தினர் உயிரிழந்த திருநிறைச்செல்விக்கு இன்னும் ஒரே வாரத்தில் திருமண நிச்சயதார்த்தமும், அடுத்து வரும் 3 மாதங்களில் திருமணமும் நடைபெற இருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
திருமணக் கனவுகளோடு இருந்த இளம் பெண், கண்முன்னே லாரி மோதி பலியானதைக் கண்டு தந்தை மகேந்திரனும், குடும்பத்தினரும் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
