மெட்ரோவில் ரயில் பயணிகளே உஷார்..! சென்னை மெட்ரோவில் டிக்கெட் செக்கர் கிடையாது.
சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் பயணசீட்டு பரிசோதகர் என்ற பெயரில் குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ எச்சரிக்கை விடுத்துள்ளது!
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது;

சில நபர்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணசீட்டு பரிசோதகராக சென்னையில் உள்ள மெட்ரோ இரயில் நிலைய வளாகத்தில் பயணிகளிடம் பயணசீட்டு பரிசோதனை என்ற பெயரில் அபராதம் வசூலிப்பதாக நிர்வாகதிற்கு தகவல் வந்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பயணசீட்டு பரிசோதனை என்ற பணியிடமே கிடையாது.
பயணசீட்டு பரிசோதகர் என்ற பெயரில் விஷமதனமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பயண அட்டைகள்/டோக்கன்கள்/க்யூ ஆர் குறியீடு போன்ற சென்னை மெட்ரோ இரயில் பயண அட்டைகள் மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலமாக மட்டுமே நுழைவு மற்றும் வெளியேறும் போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.
தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலமாக நுழைவு/வெளியேறும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மெட்ரோ இரயில் நிலையங்களில் அமைந்துள்ள கட்டண அலுவலக அறைகளில் மட்டுமே அது சரிசெய்து தரப்படும்.
தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலமாக மட்டுமே பயணசீட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதுதவிர வேறு எந்த வகையிலும் பயணசீட்டு பரிசோதனை செய்யப்படுவது இல்லை.

மெட்ரோ இரயில் பயணிகளிடம் இதுபோன்ற அநாகரிகமான, விஷமதனமான செயலில் ஈடுப்படும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று அநாகரிக செயலில் ஈடுப்படும் சந்தேகப்படும் நபர்களை பயணிகள் கண்டறிந்தால் அவர்களும் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் மெட்ரோ இரயில் நிலைய கட்டுப்பாட்டாளரிடம் புகார் அளிக்கலாம்.
இதுபோன்று சந்தேகப்படும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேற்கூறிய செயலைச் செய்த நபரால் ஏமாற்றம் அடையும் நபர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொறுப்பேற்காது.


