சென்னையில் பரபரப்பு: ஆந்திர தம்பதியிடம் விற்ற தாய், இடைத்தரகர்கள் உட்பட 4 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை; குழந்தை பத்திரமாக மீட்பு!
வறுமையில் வாடிய தாய்:
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் பவித்ரா (19). இவருடைய கணவர் கணேஷ் (எ) குள்ள கணேஷ் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி கடந்த 8 மாதங்களுக்கும் மேலாகப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சிறையில் இருப்பதால் பவித்ரா கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமையில் வாடி வந்துள்ளார். உணவிற்கே வழியின்றிச் சிரமப்பட்ட சூழலில், அவர் இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்தார்.

ஆசை வார்த்தை கூறிய இடைத்தரகர்கள்:
தங்களின் வறுமைச் சூழல் குறித்து அயனாவரத்தைச் சேர்ந்த ஆண்டாள் (64) மற்றும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (26) ஆகிய பெண்களிடம் பவித்ரா அழுது புலம்பியுள்ளார்.
இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவ்விரு இடைத்தரகர்களும், “குழந்தை இல்லாத ஆந்திரத் தம்பதி ஒருவருக்கு உனக்குப் பிறக்கும் குழந்தையைக் கொடுத்தால் ரூ. 4 லட்சம் பணம் வாங்கித் தருகிறோம். மேலும், பிரசவத்திற்கான முழுச் செலவையும் அந்தத் தம்பதியே ஏற்றுக் கொள்வார்கள்” என ஆசை வார்த்தை கூறி சம்மதிக்க வைத்துள்ளனர்.
மருத்துவமனை ஊழியருடன் கூட்டு:
திட்டத்தின்படி, வில்லிவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் வரவேற்பாளராகப் பணியாற்றும் துர்கா (43) என்பவரிடம் இடைத்தரகர்கள் நிலைமையை விவரித்துள்ளனர். சட்டவிரோத விற்பனைக்கு எவ்வித சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்ட பவித்ராவை அந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அன்று பவித்ராவிற்குப் பெண் குழந்தை பிறந்தது.
ரூ. 4 லட்சத்திற்கு கை மாறிய குழந்தை:
குழந்தை பிறந்த மறுநாளே (ஆகஸ்ட் 19), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச மூர்த்தி – செல்வரசி தம்பதியினரை வரவழைத்து குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அதற்காகப் பெறப்பட்ட ரூ. 4 லட்சத்தில், மருத்துவமனை வரவேற்பாளர் துர்காவிற்கு ரூ. 50,000 மற்றும் இடைத்தரகர் ஆண்டாள்கு ரூ. 50,000 என கமிஷன் தொகையைப் பவித்ரா பிரித்துக் கொடுத்துள்ளார்.
கமிஷன் தகராறில் வெளியான ரகசியம்:
குழந்தை விற்பனை வெற்றிகரமாக முடிந்தாலும், இடைத்தரகராகச் செயல்பட்ட தனலட்சுமிக்கு கமிஷன் தொகை எதுவும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த தனலட்சுமி, குழந்தை சட்டவிரோதமாக விற்கப்பட்ட விவகாரத்தை வெளியே கசிய விட்டுள்ளார்.
6 பிரிவுகளில் வழக்கு – 4 பேரிடம் தீவிர விசாரணை:
தகவல் அறிந்த சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (வடக்கு) சமூகப் பணியாளர் மலர்விழி, உடனடியாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட வில்லிவாக்கம் போலீசார், ஆந்திராவிற்குச் சென்று குழந்தையைப் பத்திரமாக மீட்டுச் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்:
குழந்தையைப் பெற்ற தாய் பவித்ரா,
இடைத்தரகர்கள் ஆண்டாள், தனலட்சுமி,
மருத்துவமனை வரவேற்பாளர் துர்கா
ஆகிய 4 பெண்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தொடர்பா
இந்த குழந்தை விற்பனை விவகாரம் மருத்துவமனை உரிமையாளரான டாக்டர் ராஜசேகர் மற்றும் நிர்வாகி டாக்டர் விசாலாட்சி ஆகிய இருவருக்கும் முன்கூட்டியே தெரியும் என கைதான இடைத்தரகர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவமனை நிர்வாகத்திற்கு இதில் நேரடியாகத் தொடர்பு உள்ளதா? மேலும், இவர்கள் அனைவரும் இணைந்து இதுபோன்று ஏற்கனவே சட்டவிரோதக் குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளனரா? என்ற பல்வேறு கோணங்களில் வில்லிவாக்கம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வார்டு மேம்பாட்டு நிதி வழங்கக் கோரி கருப்பு உடையில் மேயர் பிரியா & திமுக கவுன்சிலர்கள்
