மழை பாதிப்பு- உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவரும் நிலையில், ஆங்காங்கே மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
மழைநீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதன்படி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மழைநீர் பாதிப்புகளுக்கு 1913, மழைநீர் அகற்ற 044 4567 4567, குடிநீர் வாரியத்தை தொடர்பு கொள்ள 1916 ஆகிய எண்களை அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளப்பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார்நிலையில் உள்ளது. இம்முகாம்களில் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அனைத்து வசதிகளுடன் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், பொதுமக்களிடமிருந்து வருகின்ற புகார்களை உடனுக்குடன் கண்காணித்து அவற்றை அவற்றை தொடர்புடைய துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொண்டு நிவர்த்தி செய்ய மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை (எண்.1077, 044-27427412, 044-27427414 மற்றும் Whatsapp No: 9444272345) (24X7) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தரமணி மற்றும் ஆலந்தூரில் தலா 14 செ.மீ., மழையும், செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ., மழையும் அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 10 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல மேற்கு தாம்பரம், குன்றத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீ., மழையும், கொரட்டூர், எம்.ஜி.ஆர். நகரில் தலா 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.