பெட்ரோல் டேங்கில் மண்ணை அள்ளி கொட்டிய வாலிபர்கள் கைது
மாணவி காதலை ஏற்க மறுத்ததால் இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கில் மண்ணை அள்ளி கொட்டிய வாலிபர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் தனியார் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வீட்டருகே நிறுத்தி வைத்திருந்த மாணவியின் இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கில் இருவர் மண்ணை அள்ளிப்போட்டு வந்துள்ளனர். இதனை கண்ட அருகிலிருந்தோர் கூச்சலிட்டதால் இருவரும் பைக்கில் தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாபு அயனாவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, இருசக்கர வாகன டேங்கில் மண்ணை அள்ளிப்போட்டது பெரம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பாரதி(19) மற்றும் அவரது நண்பர் முகமது அப்சல்(19) என்பது தெரியவந்தது.
இவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, பாபுவின் மகளுக்கும் பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பேசி வந்துள்ளனர். தினமும் பாரதி அவரது பெண் தோழியை பைக்கில் கல்லூரிக்கு அழைத்து செல்வதும், பின்னர் கல்லூரி விட்ட பிறகு அவரது பெண் தோழியை அழைத்து வந்து வீட்டில் விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதே போல கடந்த ஆறு மாதங்களாக பாரதி பைக்கில் பிக்கப், டிராப் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் தோழி புதிய இருசக்கர வாகனம் வாங்கியதால், கல்லூரி முடிந்த பின்பு பெண் தோழி பாரதியுடன் வராமல் அவரது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இதற்கிடையே பாரதி அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். காதலுக்கு பெண் தோழி மறுப்பு தெரிவித்து பாரதியுடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். புதிய பைக் வாங்கியதால் தான் தன்னுடன் பைக்கில் வரவில்லை, இதனால் தான் தனது காதல் கைக்கூடவில்லை என ஆத்திரமடைந்த பாரதி பெண் தோழியின் இருசக்கர வாகனத்தை ரிப்பேர் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனால் பாரதி தனது நண்பருடன் இணைந்து பெண்ணின் இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கில் மண்ணை அள்ளிக்கொட்டியது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.