சென்னையில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு
சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் விபத்துக்குள்ளானது.
விஜயவாடாவில் இருந்து புறப்பட்ட ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்னை சென்ட்ரல் வந்தது. சென்னை சென்ட்ரலில் பயணிகளை இறக்கிவிட்டு பேசின் பிரிட்ஜ் பணிமனை நோக்கி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. பணிமனைக்குள் சென்றபோது, ரயிலின் முன்பக்க பெட்டிகளின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.

இது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், 2 மணி நேரம் போராடி சக்கரத்தை தண்டவாளத்தில் ஏற்றினர். இந்த சம்பவத்தால் பேசின் பிரிட்ஜ் மெயின் லைன் ரயில் போக்குவரத்தில் பாதிப்பும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைகாலமாக ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகிவருகிறது. நேற்று உதகையில் மலை ரயில் தடம் புரண்டது. அதேபோல் அசாம், மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் அடுத்தடுத்து ரயில் தடம் புரண்டுவருவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.