டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள், கோப்ரா, டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தையும் இயக்கினார். அடுத்ததாக டிமான்ட்டி காலனி 3 படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இந்நிலையில் இவர், திரைத் துறையில் இயக்குனராக அறிமுகமாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என்னுடைய முதல் படமான டிமான்ட்டி காலனி தன இயக்குனராக பணி புரிவதற்கு முந்தைய கால கட்டத்தின் பிரதிபலிப்பாக. ஏனெனில் ஹாரர் படங்கள் திரையரங்குகளில் ஒரு பார்வையாளராக எனக்கு அதிக உற்சாகத்தை கொடுத்தது. தி எக்ஸார்சிஸ்ட், தி ஓமன் மற்றும் தி கான்ஜுரிங் போன்ற கிளாசிக் ஹாரர் படங்கள் எல்லா சினிமா ரசிகர்களுக்கும் என்றென்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இதுபோன்ற படங்களின் தாக்கமே தடைகளை கடந்து புதிய உலகத்தை உருவாக்க என்னை தூண்டியது. அதில் தான் டிமான்ட்டி காலனி என்ற எனது ஹாரர் ஜானர் படத்தை உருவாக்கினேன். அருள்நிதி சார் டிமான்ட்டி காலனி உலகத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்பது எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
தொழில்துறை நண்பர்கள், பத்திரிகை ,ஊடக நண்பர்கள், சினிமா ரசிகர்கள் எனக்கு கொடுத்து வரும் அன்பு ஒவ்வொரு கட்டத்திலும் தரமான படைப்பை வழங்குவதற்கான பொறுப்பை மேன்மேலும் அதிகரித்து வருகிறது. இந்த டிமான்ட்டி காலனி வரிசையில் இரண்டு படங்களுக்கும் கிடைத்த மகத்தான வரவேற்பை அடுத்து இதன் மூன்றாவது பாகத்தை எனது குழுவுடன் இணைந்து அனைத்து வகையிலும் தரமாகவும் சிறப்பாகவும் எடுத்து வருகிறோம். இது நிச்சயமாக சினிமா ரசிகர்களுக்கு புதுவகையான சில்லிடும் ஹாரர் அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் அடுத்த கட்ட தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.