இளையராஜா குட் பேட் அக்லி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 63வது படமாக உருவாகியிருந்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்திருக்கிறது. அதாவது ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஆதிக் ரவிச்சந்திரன் முரட்டு ஃபேன் பாய் சம்பவம் செய்திருப்பதால் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதன்படி இப்படம் வெளியான முதல் 3 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலை கடந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் 5 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 100 கோடியை கடந்துவிட்டது என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா, குட் பேட் அக்லி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி ஆகிய மூன்று பாடல்களும் இடம்பெற்று இருந்தது. இளையராஜா இசையில் உருவாகியிருந்த இந்த மூன்று பாடல்களும் முறையான அனுமதி இல்லாமல் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதில் குட் பேட் அக்லி படக்குழு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் 7 நாட்களுக்குள் இளையராஜாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையென்றால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் குட் பேட் அக்லி படக்குழு 3 பாடல்களையும் பயன்படுத்துவதற்காக மியூசிக் லேபிளிடமிருந்து NOC பெற்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.