கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் குறும்படங்களை இயக்கத் தொடங்கினார். அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தின் மூலம் வெள்ளி திரையில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. சூர்யா, ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், சுவாசிகா, பிரகாஷ் ராஜ், விது மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் கார்த்திக் சுப்பராஜ், சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ், ஒரு சுயாதீன படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.