பெரும்பாலும் தன்னடக்கம் இருப்பவர்களிடம் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு திறமை இருந்தாலும் பெரும் சாதனையாளர்களாக வளர முடியாது என்று சொல்வது வழக்கம். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இடம் தன்னம்பிக்கையும் இருக்கிறது, அதே அளவிற்கு தன்னடக்கமும் இருக்கிறது. உலகமே வியக்கும் அளவிற்கு சாதனையாளராகவும் இருந்து வருகிறார் என்பது தான் அதிசயம்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 5 வது வயதிலேயே தாயை இழந்தவர். தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்தவர்.

ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளியான ஆச்சார்யா பாட சாலையில் தனது எஸ்.எஸ்.எல்.சி பள்ளிப் படிப்பை முடித்த ரஜினிகாந்த், மாலை நேரப் பிரார்த்தனை, தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற அனைத்தையும் பள்ளியிலேயே கற்றுக் கொண்டார்.
ரஜினி
இயற்கையிலேயே முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் கொண்டவர். ஆபிஸ் ப்யூனாக தனது முதல் பணியை தொடங்கியவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், தச்சுப் பட்டறைத் தொழிலாளியாகவும் பணிபுரிந்திருக்கின்றார். பின்னர் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி உள்ளார். இந்த முரட்டு மனிதருக்குள்ளும் ஒரு நடிகர் இருக்கின்றார் என்பதை முதன்முதலில் அறிந்து இவருக்கு அரிதாரம் பூசி நடிகராக்கியது இவருடைய நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் என்பவர்.
பொழுது போக்கிற்காக நாடகம் போடும் ராஜ் பகதூர், அப்போதைய ரஜினியின் வேகமான நடையும் சுறுசுறுப்பையும் பார்த்து பிடித்துப் போக தனது “குருஷேத்திரம்” நாடகத்தில் துரியோதனன் வேடத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்று ரஜினியை உற்சாகப்படுத்தி வந்ததோடு நிற்காமல் தமிழக அரசு திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கவும் வைத்தார். அதுவரை பார்த்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துனர் வேலையை தூக்கி எறிந்துவிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

கலைக் கல்லூரியில் வசன உச்சரிப்பு, மேக்கப் டெஸ்ட் மற்றும் நடிப்பு என அனைத்து நேர்காணலிலும் வெற்றி பெற்று அங்கே நடிப்பை கற்கத் தொடங்கினார். ஏறக்குறைய இரண்டாண்டுகள் நடிப்பு பயிற்சி முடியும் தருணத்தில் தேர்வு அதிகாரிகளாக பிரபலமான இயக்குநர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் இயக்குநர் கே. பாலசந்தர் கல்லூரிக்கு வந்தார். அவரோடு மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு உரையாடல் செய்தனர்.
அப்போது சக மாணவரான ரஜினி, இயக்குநர் கே. பாலசந்தரிடம் நடிப்பைத் தவிர ஒரு நடிகனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்ப, அதற்கு கே.பாலசந்தர் ஒரு நடிகன் ஸ்டூடியோவிற்கு உள்ளே தான் நடிக்க வேண்டும் வெளியே நடிக்கக் கூடாது என்று பதில் அளித்து விட்டு வெளியே வந்த பாலச்சந்தர், மீண்டும் ரஜினியை அழைத்து உனக்கு தமிழ் தெரியுமா? என கேட்க, கன்னட வாடையோடு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என ரஜினியிடமிருந்து பதில் வந்தது. முதலில் தமிழில் நன்றாக பேசக் கற்றுக் கொள் பிறகு உன்னை நான் பயன்படுத்திக் கொள்கின்றேன் என கூறி சென்று விட்டார்.
சொன்னது போலவே பாலச்சந்தரிடம் இருந்து ரஜினிக்கு அழைப்பும் வந்தது. “அபூர்வ ராகங்கள்”. திரைப்படத்தில் நடிகை ஸ்ரீவித்யாவின் கணவர் வேடத்தில் அறிமுகமானார்.
திரைப்படத்தில் இவர் பேசிய முதல் வசனம் “பைரவி வீடு இதுதானா?”, “நான் பைரவியின் புருஷன்” என்று தனது முதல் காட்சியிலேயே தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசி நடிக்கும் வாய்ப்பும் ரஜினிக்கு கிடைத்தது.
இந்தப்படத்திற்குப் பின்னர் தான் சிவாஜிராவாக இருந்தவர், ரஜினிகாந்த் என்று கே.பாலசந்தரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து கே.பாலசந்தரின் அடுத்தடுத்த படங்களான “மூன்றுமுடிச்சு”, ‛அவர்கள்’ போன்ற படங்களில் பிரதான வில்லன் வேடமேற்று நடித்து மிகப் பிரபலமானார்.

இதே காலக்கட்டத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகப் படமான “16 வயதினிலே” திரைப்படத்தில் ரஜினி ஏற்று நடித்த “பரட்டை” கதாபாத்திரமும். அதில் அவர் “இது எப்படி இருக்கு” என்று பேசுகின்ற வசனமும் இன்றும் ரசிகர்களால் பெரிதும் விரும்பக் கூடியதாக இருந்து வருகிறது.
இவ்வாறு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு இருந்த ரஜினியால் குணச்சித்திர வேடத்திலும் ஜொலிக்க முடியும் என்று அவருக்குள் இருந்த அந்த குணச்சித்திர நடிகரை அடையாளம் காட்டியவர் எஸ்.பி.முத்துராமன். இவர் இயக்கத்தில் வெளிவந்த “புவனா ஒரு கேள்விக்குறி” திரைப்படத்தில் முழுக்க முழுக்க குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.
ரஜினி முழு ஹீரோவாக அவதாரம் எடுத்த முதல் திரைப்படம் “பைரவி”. கலைஞானம் தயாரிப்பில் எம்.பாஸ்கர் இயக்கத்தில் ஹீரோவானார்.
அதுவரை எம்.ஜி. ஆரை வைத்து படமெடுக்காத தயாரிப்பாளர்கள் கே.பாலாஜி, முக்தா சீனிவாசன் போன்றோரும் அதேபோல் சிவாஜியை வைத்து படமெடுக்காத தேவர் பிலிம்ஸ், சத்யா மூவீஸ் போன்றவர்களும் ரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்கள்.
80 களின் ஆரம்பத்தில் பல வித்தியாசமான படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் அன்றைய ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான நடிகராக மாறினார். அந்த ஈர்ப்பு தான் அப்படியே மாறி மாறி அவரை சூப்பர் ஸ்டார் என்கிற உச்சத்திற்கு உயர்த்தியது.
ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி தயாரித்த திரைப்படம் “வள்ளி”. குறிப்பாக 1990களில் வெளிவந்த “தளபதி” “மன்னன்” “அண்ணாமலை” “உழைப்பாளி” “வீரா” “பாட்ஷா” “முத்து” “அருணாச்சலம்” மற்றும் “படையப்பா” என அனைத்து படங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றவை. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 175 படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.

காலம் மாற மக்களின் ரசனையும் மாறும் என்பார்கள். ஆனால், ரஜினிகாந்தைப் பொறுத்தவரை அது “கூலி” வரையிலும் மாறாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது, இதன் பின்னரும் தொடரத்தான் போகிறது. எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னை அப்படியே பொருத்திக் கொள்ளும் திறமை ரஜினியிடம் இருக்கிறது. அவரை ராகவேந்திரராகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது, எந்திரனாகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது, கபாலி ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.
சினிமாவுக்கு என்று இருந்த இலக்கணத்தை உடைத்து இன்றும் பலர் தங்களை ஹீரோவாக நினைத்துக் கொண்டு திரையுலகத்திற்குள் நுழைவதற்கும், அப்படி நுழைந்தவர்கள் தங்களை சூப்பர் ஸ்டார்கள் என்று தன்னைத்தானே நினைத்துக் கொள்வதற்கும் முதலில் பாதை போட்டுத் தந்தவர் ரஜினிகாந்த்.
இந்த 50 ஆண்டுகள் திரைப்பட வாழ்க்கையில் கே.பாலசந்தர் தொடங்கி இன்றைய இளம் இயக்குநர்களான பா.ரஞ்சித் மற்றும் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் வரை அனைத்து இயக்குநர்களிடமும் பணியாற்றியும், பணிபுரிந்துக் கொண்டும் இருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே.
குடியுரிமை பறிக்க சதி…புள்ளி விவரத்தோடு பேசிய திருமாவளவன்… நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்…


