நடிகை கௌதமி மீண்டும் சீரியலுக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கௌதமி திரைத்துறையில் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு கூட்டணியில் வெளியான குரு சிஷ்யன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தார். மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றியுள்ளார். பின்னர் சில காலங்கள் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த கௌதமி, கமல்ஹாசனின் பாபநாசம் திரைப்படத்தின் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்.
இதற்கிடையில் இவர், இந்திரா, அபிராமி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது மீண்டும் 14 வருடங்களுக்குப் பிறகு சீரியலில் நடிக்க உள்ளார் கௌதமி. அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கிறார். இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சீரியல் விரும்பிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.