தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான இயக்குனர்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு இயக்குனர் தான் பாலா. அவர் தேர்வு செய்யும் கதை மட்டுமல்ல, படப்பிடிப்பு களமும், நடிகர் நடிகைகளின் கதாபாத்திரமும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அவர் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்று கூட தெரியாது. ஆனால் அவர் சொல்வதைப்போல நடித்தால், தமிழ் திரையுலகில் அவர்கள் ஜொலிப்பது உறுதி என்றே சொல்லலாம்.
சேது, நந்தா, பரதேசி ஆகிய திரைப்படங்கள் பாலாவின் திரை வாழ்வில் மிகப்பெரிய மைல் கல். இயக்குநரான பாலாவுக்கு மட்டுமல்ல, படத்தில் நடித்த விக்ரம் மற்றும் சூர்யாவுக்கும் அத்திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. நிறைய ஹிட் கொடுத்த பின்னர் அதை பலர் சாதாரணமாக கடந்து சென்று விட்டனர். ஆனால் பாலாவின் ஆரம்ப காலத்தில் இந்த இயக்குனருக்கு உண்மையிலேயே இயக்க தெரியுமா என்று தான் பிரபலங்களுக்கு தோன்றுமாம்.
நடிகர் சூர்யாவின் சாக்லேட் பாய் லுக்கை மாற்றி அவருக்கும் நடிக்க தெரியும் எனப் பேச வைத்தது நந்தா திரைப்படம் தான். அதிலும் முரட்டு தனமான கதையில் நடித்தார். இதில் நாயகியாக லைலா நடித்து இருந்தார். ஒரு நாள் அவர் ஹோட்டலுக்கு சென்று தாயிடம் கதறி அழுதாராம். இயக்குநர் பாலா கடுமையாக திட்டுவதாகவும், கட்டளைகள் போடுவதாகவும் தாயிடம் குற்றம் சாட்டியிருக்கிறார். தினமும் லைலா படப்பிடிப்புக்குச் செல்லும்போது, அழுதுகொண்டே செல்வாராம். படப்பிடிப்பு முடிந்து படத்தை படக்குழுவோடு பார்த்தபோது, நானா இப்படி நடித்திருக்கிறேன் என ஆச்சர்யபட்டு போனாராம் லைலா. படமும் வெற்றிபெற்ற லைலாவின் வேடமும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகை லைலா, பாலாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழுதாராம்.