தெலுங்கு திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவருடைய அல வைகுந்தபுரமுலு, புஷ்பா, புஷ்பா 2 ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இமாலய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் ரேஞ்சில் உருவாகும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பு எகிற வைத்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில், அதாவது ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் இப்படத்தில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன், த்ரிவிக்ரம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். எனவே ஒரே நேரத்தில் அட்லீ படத்திலும் த்ரிவிக்ரம் படத்திலும் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம் அல்லு அர்ஜுன். இது ஒரு பக்கம் இருக்க, புஷ்பா 3 திரைப்படம் எப்போது தொடங்கும்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கூட புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர், புஷ்பா 3 திரைப்படத்தை 2028 இல் எதிர்பார்க்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அல்லு அர்ஜுன் தன்னுடைய புதிய படங்களை முடித்த பிறகு தான் புஷ்பா 3 படத்தில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. அதன்படி அல்லு அர்ஜுன், புஷ்பா 3 படத்தில் நடிப்பதற்காக 2028ல் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்றும் ஆகையினால் இப்படம் 2030ல் தான் திரைக்கு வரும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -