அயலான் இயக்குநர் வீட்டில் நல்ல செய்தி… ரசிகர்கள் வாழ்த்து…
- Advertisement -
நேற்று இன்று நாளை மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமாருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பல முகங்கள் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். முன்னர் போல் இல்லாமல் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அவர்களின் திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிக்கின்றன. வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் ஆர்.ரவிக்குமார். நேற்று இன்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆர்.ரவிக்குமார். டைம் டிராவலை மையப்படுத்தி உருவான இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.


இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்தார் ஆர்.ரவிக்குமார். அவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் அயலான். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்தது. ஆனால், பட வெளியீட்டில் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அயலான் பட இயக்குநர் ஆர்.ரவிக்குமார் ஒரு நல்ல செய்தி ஒன்றை கூறியிருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். ஆர்.ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி பிரியாவுக்கும் ஏற்கனவே பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனால் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.