நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை உயர்நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். இவருடைய பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோரின் ஈசன் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 30 சதவீத வட்டியுடன் ரூ. 3.74 கோடி கடனாக வாங்கி இருந்தது. இதன் பின்னர் இந்த கடனை திருப்பி வழங்காததால் கடன் தொகையை வட்டியுடன் ரூ. 9.39 கோடியை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படியும் கடந்த ஆண்டு மே மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இது தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி டி. ரவீந்திரன் மத்தியஸ்தனம் செய்ய நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் துஷ்யந்த் தரப்பில் பதிலளிக்காத நிலையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.