கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கு பல பேர் நடனமாடியிருந்தனர். இந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் இந்த பாடலுக்கு ஆயிரம் பேரை நடனமாட வைப்பதாக கூறி ரூ. 35 லட்சம் முறைகேடு செய்ததாக டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அவர் நடன இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருப்பதால், அவரை அந்தப் பொறுப்பில் இருந்து விளக்க வேண்டும் என நடன இயக்குனர்கள் சார்பில் போராட்டமும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தினேஷ் மாஸ்டர் இது தொடர்பாக, “ஒவ்வொரு முறையும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் எலக்சன் வரும்போது இந்த லியோ பட பிரச்சனையை கொண்டு வந்து விடுகிறார்கள். என் மீது குற்றம் சொல்ல காரணம் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். வருகிற ஆகஸ்ட் முதல் தேர்தல் நடைபெறும். லியோ படத்தில் ஆயிரம் நடன கலைஞர்கள் தேவைப்பட்டபோது சங்கத்தைச் சேர்ந்த 500 பேரை அழைத்தோம். மீதமுள்ள நடன கலைஞர்களுக்கு நடன பயிற்சி மையங்களில் உள்ளவர்களை அழைத்து வந்தோம். படப்பிடிப்பை முடிந்த பின் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில் இது பெப்சியின் கவனத்திற்கு சென்றது. அங்கேயும் ஒரு வாக்கெடுப்பு நடந்தது அப்போதும் நான் தான் ஜெயித்தேன். இப்போது மீண்டும் எலெக்ஷன் வரும்போது அதே பிரச்சனையை கொண்டு வருகிறார்கள்” என்று தனது தரப்பிலான விளக்கத்தை கொடுத்தார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இது தொடர்பாக தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், “ஸ்கேம் எல்லாம் இருக்காது. சரியான புரிதல் இல்லாமல் இருந்திருக்கும். தினேஷ் மாஸ்டர் நல்ல மனிதர். மிகவும் அன்பானவர். இதில் ஒவ்வொருவரும் அவரவர் தரப்பில் உள்ளதை சொல்வார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. யூனியனில் எல்லாரும் ஒற்றுமையாக கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.