Homeசெய்திகள்சினிமாதிரையுலகின் முடிசூடா மாமன்னன், நடிப்பு அரக்கன் ஃபகத் பாசிலின் பர்த்டே ஸ்பெஷல்!

திரையுலகின் முடிசூடா மாமன்னன், நடிப்பு அரக்கன் ஃபகத் பாசிலின் பர்த்டே ஸ்பெஷல்!

-

- Advertisement -

ஃபகத் பாசிலின் 41வது பிறந்தநாள் இன்று.

யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா என்ற வகையில் யார் படமாக இருந்தாலும் அதில் தன்னுடைய அபார நடிப்பின் மூலம் கதாநாயகனையே சாப்பிட்டுவிடுவார் நடிப்பு அரக்கன் பஹத் பாசில்.

ஒரு கதாபாத்திரத்தை மக்கள் வெறுக்க வேண்டும் என்றால் அந்தக் கதாபாத்திரத்திற்கு பஹத் பாசிலை தேர்வு செய்யக் கூடாது என்றே விதியே உருவாக்கியுள்ளனர். படத்துக்கு படம் இவரின் நடிப்பு திறமை அதிகமாகிக் கொண்டே போகும். பகத் பாசிலுக்கு நிகர் பகத் பாசில் மட்டும்தான் என்ற அளவிற்கு தனது அசுரத்தனமான நடிப்பை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார்.
சிறு சிறு கதாபாத்திரங்களானாலும் எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்து தனக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொண்டார்.
காதல், வில்லத்தனம், கையாலாகாத தனம், குற்ற உணர்ச்சி, கொடூரமானவன், அன்பு, பாசம், நேர்மை என எந்த கதாபாத்திரத்திலையும் தேர்ந்தெடுத்து மிக நேர்த்தியாக நடித்து ஓராயிரம் உணர்ச்சிகளையும் தன் கண்களின் மூலம் கற்றுத் தருவார். இதற்காகவே இவருக்கு நடிப்பு அரக்கன் என்ற பெயரும் கிடைத்தது.

பில்டப் போதும் விஷயத்திற்கு வருவோம். மலையாள சினிமாவில் தேர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் பஹத் பாசில். மலையாள சினிமாவில் யதார்த்த கதைகளின் மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் பஹத். தற்போது பெரிய ஹீரோ ஆகிவிட்டாலும் என்ன கதாபாத்திரம் ஆக இருந்தாலும் ஏற்று நடித்து அதில் தன் சிறந்த நடிப்பைக் கொடுத்து படத்தில் தன் கதாபாத்திரம் தான் முழுதும் பேசப்படும் என்ற வகையில் சம்பவம் செய்துவிட்டு செல்வார். அவரது கண்களே மொத்த நடிப்பையும் தானே செய்துவிடும்.

41வது பிறந்த நாளை கொண்டாடும் பகத் பாசில் கடந்த 2002 ஆம் ஆண்டு அவரது தந்தை இயக்கிய கையேதும் தூரத் எனும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இவரின் முதல் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின் தனக்கும் நடிப்புக்கும் ஒத்துவரவில்லை என்று சில காலங்கள் சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா கஃபே என்னும் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து வெளியான சப்பா குரிஷூ என்ற திரில்லர் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்திற்காக கேரளா அரசின் மாநில விருது பகத் பாசிலுக்கு கிடைத்தது.

அதன் பிறகு இவர் நடித்த அடுத்தடுத்த படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த வகையில் இவர் நடித்த கும்பலாங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம், அன்னையும் ரசூலும், டிரான்ஸ், மாலிக் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

மேலும் பகத் பாசில் தமிழில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து புஷ்பா, விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

விக்ரம் படத்தின் முதல் பாதி முழுவதையும் பஹத் தான் ஒற்றை ஆளாக தோளில் தாங்கினார். சமீபத்தில் கூட மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ஹீரோ உதயநிதி, வடிவேலுவை தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பால் மிஞ்சிவிட்டார் பஹத். அவருக்கு படத்தில் அனைவரையும் வெறுக்க வேண்டும் என்ற வகையில் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவரது நடிப்பு அதீதமாக மிளிரவே அந்த வில்லன் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

50க்கும் மேலான படங்களில் நடித்துள்ள இவர் தனது அசாத்தியமான நடிப்பிற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, ஃபிலிம்பேர் விருது, ஏசியாநெட் திரைப்பட விருது, கேரளா அரசின் மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இடையிடையில் பல தோல்விகளை தழுவினாலும், தோல்விகள் இவருக்கு பழக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து தளராமல் தனக்கென தனி அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு தோல்வியின் நாயகனாக இருந்து திரை உலகின் முடிசூடா மாமன்னனாக வலம் வரும் பகத் பாசிலுக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ