பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகை நவ்யா நாயர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் மோகன்லால், பிரித்விராஜ், திலீப், ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழில், கடந்த 2004 ஆம் ஆண்டு ‘அழகிய தீயே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் ராமன் தேடிய சீதை, பாசக் கிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கலைஞரின் கைவண்ணத்தில் ‘பாசக்கிளிகள்’ என்னும் திரைப்படத்தில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனனுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின் கணவர், மகன் என குடும்ப வாழ்க்கையில் பிசியான இவர் நடிப்பதிலிருந்து சற்று விலகி இருந்தார்.
தற்போது இவர் ‘ஜானகி ஜானே‘ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையை மீண்டும் தொடங்கியுள்ளார்.
இந்த படம் கடந்த மே 12 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து இவர் ‘ஜானகி ஜானே’ படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்.
இதனால் ஏற்பட்ட அலைச்சல் மற்றும் உணவு ஒவ்வாமை போன்ற காரணத்தினால் நவ்யா நாயருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஜானகி ஜானே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் நவ்யா நாயர் குணமடைந்தவுடன் இந்த பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.