கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என காலத்தால் அழிக்க முடியாத தரமான படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவருடைய படங்கள் அனைத்துமே எதார்த்தமானதாகவும், சமூகத்தில் பேசத் தயங்குகின்ற விஷயங்களை அழுத்தமாக பேசக்கூடிய படங்களாகவே இருந்துள்ளன. இதனால் ராம் இயக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அடுத்ததாக இவர் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து “ஏழு கடல் ஏழு மலை” என்னும் படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இப்படத்தில் சில போஸ்டர்கள் தவிர ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் நகரில் நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற “இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்” நிகழ்ச்சியில் இப்படத்தை திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழா, வரும் 2024 ம் ஆண்டு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உட்பட படத்தின் பிற டெக்னீசியன்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
2023ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதாகவும், இயக்குனர் ராம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு உலக அளவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளதற்கும் நன்றி தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
- Advertisement -