இயக்குனர் அமீர், ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர்,
அவனியாபுரம், பாலமேடு போன்ற பகுதியில் நடைபெறும் போட்டியில் ஆயிரக்கணக்கான காளைகளை அடக்க களத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பங்கேற்பர். அதேபோல இந்த வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. அதிக காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இதே போல கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற வீரர்களுக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் காருக்கு பதிலாக வெற்றி பெறும் போட்டியாளருக்கு அரசுப் பணி வழங்க ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கையை தற்போது இயக்குனர் அமீர் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வேண்டுகோளாக வைத்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கென பிரத்தியேகமாக “கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானம்” மதுரையில் திறக்கப்பட உள்ளது. இத்தகைய சமயத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை விளையாட்டு இட ஒதுக்கீட்டின் உட்பிரிவில் சேர்த்து போட்டியாளர்களை ஊக்குவிக்க ஆவன செய்ய வேண்டுவதாகவும் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்.