பிரபல ஹாலிவுட் இயக்குநரும் நடிகருமான ராப் ரெய்னர் (Rob Reiner) மற்றும் அவரது மனைவி மிச்செல் ரெய்னர் (Michele Reiner) படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களின் மகன் நிக் ரெய்னர் (32) மீது மேலும் பல கடுமையான பிரிவுகளின் கீழ் திருத்தப்பட்ட புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதிர்ச்சித் திருப்பம்:
கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள சொகுசு வீட்டில் ராப் ரெய்னரும் அவரது மனைவியும் கத்தியால் குத்தப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர்களின் மகன் நிக் ரெய்னர் மீது ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சலஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய குற்றப்பத்திரிகையில், “பெற்றோரைக் கொலை செய்ய நிக் ரெய்னர் முன்கூட்டியே திட்டமிட்டு, வீட்டில் மறைந்திருந்து காத்திருந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளார்” என்ற அதிர்ச்சித் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை ஆபத்து:
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிக் ரெய்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள போதிலும், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
“தங்களை நேசித்த பெற்றோரையே திட்டமிட்டுக் கொடூரமாகக் கொன்ற செயல் மன்னிக்க முடியாதது” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நிக் ரெய்னருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
