கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற இருந்த இடத்தை தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கலைஞர் 100 என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில், முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் அஜித் உள்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழா முதலில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு இட வசதி குறைவு என்பதால் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பு நிகழ்ச்சி நடக்கும் நாள் கடந்த டிசம்பர் மாதம் 24-ஆக இருந்தது. ஆனால், மழை வெள்ளம் காரணமாக ஜனவரி 6-ம் தேதிக்கு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் சேப்பாக்கம் மைதானத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதனால், தற்போது விழா நடக்கும் இடத்தை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பெப்பி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதாலும், இட வசதிக்காகவும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 6-ம் தேதி மாலை 4 மணிக்கு கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் கலைஞர் 100 விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 25 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர்.