இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் திரை வாழ்வில் கள்வன் திரைப்படம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று படத்தின் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களாக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக தன் பயணத்தை தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ். விஜய், அஜித், விக்ரம், கார்த்தி,சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் அவர் இசை அமைத்துள்ளார். கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு அவர் இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
பல திரைப்படங்களில் பல பாடல்கள் ஜி.வி. பிரகாஷ் பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமன்றி பிற மொழி பாடல்களையும் அவர் பாடியுள்ளார். டார்லிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் கள்வன் என்ற படத்தில் நடித்துள்ளார். இவானா மற்றும் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் பல மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது.
இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஷங்கர், நாள் முழுவதும் காட்டுப் பகுகியில் கல்லும், முள்ளுமாக உள்ள பாதைகளில் பயணித்து படப்பிடிப்பை நடத்தினோம். மலைப்பகுதிகளில் சென்று பல காட்சிகளை படமாக்கினோம். இதனால் படப்பிடிப்புக்கு அதிக நாட்கள் ஆனது. இத்திரைப்படம் ஜி.வி.பிரகாஷின் திரைவாழ்வில் ஒரு முக்கியத் திரைப்படமாக அமையும் என தெரிவித்துள்ளார்.