கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் சூர்யா 45 படத்திற்காக தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தி தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ்.ஜே. சூர்யா படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஏறத்தாழ படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த படத்தை 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 திரைப்படமானது 2025 தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. எனவே இதன் காரணமாக சர்தார் 2 படத்தின் வெளியீட்டை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஒத்திவைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.