பிரபல தமிழ் பட இயக்குனர் ஒருவர், மலையாள சினிமாவின் ஜாம்பவான்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரை இயக்குவது தான் தன்னுடைய லட்சியம் என கூறியுள்ளார்.
கடந்த 2018 இல் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோரின் நடிப்பில் 96 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரேம்குமார். ராம்- ஜானு என்ற இருவரின் பரிசுத்தமான காதலை மிகவும் அழகாக திரையில் காட்டி இருந்தார் பிரேம்குமார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து பிரேம்குமார், கார்த்தி – அரவிந்த்சாமி கூட்டணியில் மெய்யழகன் எனும் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர், 96 பாகம் 2 படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரேம்குமார், மலையாள சினிமாவில் ஜாம்பவான்களாக வளம் வரும் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரையும் இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “நான். மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர்களின் படங்களை பார்த்து வளர்ந்தவன். இருவருடனும் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய லட்சியம். என்னுடைய கனவு. மேலும் பகத் பாசில், துல்கர் சல்மான் ஆகியோரையும் எனக்கு பிடிக்கும். விரைவில் அவர்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.