நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து, வெளியான “சர்தார்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சசிகுமார் நடித்திருந்த “காரி” திரைப்படம் ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியானது.

இந்நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ள புதிய படத்தைத் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. கமர்சியல் வெற்றியான “கொலைகாரன்” மற்றும் சமீபத்தில் வெளியான அமேசான் பிரைம் வெப் சீரிஸ் “வதந்தி” ஆகியவற்றை இயக்கி வெற்றிகளைக் கொடுத்தவர் ஆண்ட்ரூ லூயிஸ். இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘எஃப்.ஐ.ஆர்.’ பட இயக்குநர் மணு ஆனந்த் உடன் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் கைக்கோர்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் மற்றும் இயக்குநர் மணு ஆனந்த் இருவரும் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.