ரஜினி, மோகன்லால் பட நடிகை ராம் சரணின் புதிய படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான ராம் சரண் கடைசியாக ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனது 16வது படமான பெடி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘உப்பெனா’ படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். ரத்னவேலு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முன்னோட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் இதன் ‘சிகிரி சிகிரி’ பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனிவரும் நாட்களில் இவருடைய கதாபாத்திரம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. நடிகை ஷோபனா ரஜினி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


