சின்னத்திரை நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தது திரைத்துறையினரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போதே வெகுவாக வியர்த்து ஏற்பட்ட அசௌகரியத்தினால் மாரிமுத்து ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்து அவருடைய காரை அவரே ஒட்டி சென்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. 1990 முதல் இவருடைய சினிமா பயணம் தொடங்கி இருந்தாலும் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் டிரெண்டாகி வந்தார். இவருடைய இறப்பு ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் ஒரு பேரதிர்ச்சியாக மாறியது. பல சினிமா பிரபலங்களும் மாரிமுத்துவின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் மாரிமுத்துவின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அப்பதிவில் “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார். நடிகர் மாரிமுத்து ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.