உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்‘ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இதற்கிடையில் இந்தப் படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்” அமைச்சரான பின்பு படங்களில் நடிப்பது சரியாக இருக்காது எனவே இதுவே என் கடைசி படம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் செய்ய தடை விதிக்க கோரி ஓ எஸ் டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக கே எஸ் அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதம் 20 சதவீதம் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஏஞ்சல் படத்தில் முழுமையாக நடித்துக் கொடுக்காமல், மாமன்னன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இதுதான் என்னுடைய கடைசி படம் என்று கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் வெறும் எட்டு நாட்களுக்கு கால் சீட் தர மறுக்கிறார். இதனால் எனக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும்.
ஆதலால் உதயநிதி ஸ்டாலின் 25 கோடி ரூபாய் இழப்பீடு தரும்படி உத்தரவிட வேண்டும் எனவும் அதுவரை மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் ராமசரவணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.