டீப் பேக் தொழில்நுட்பத்தால் தினந்தினம் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து அச்சப்படுவதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு வேண்டும் எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
மாடலாக அறிமுகமாகி கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நடிகையாக திரைக்கு வந்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகம் என்ற குறுதிய வட்டத்தில் ஒரு சிறிய நடிகையாக அறிமுகமான ராஷ்மிகாவுக்கு, முதல் படத்திற்கு பிறகு தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் அவர் நடித்தார். இத்திரைப்படம் தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம் என அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெறவே அவர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அடுத்தடுத்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தார் ராஷ்மிகா.
அடுத்து தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து விஜய் நடித்து வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் உச்சம் தொட்ட அவர் அடுத்து பாலிவுட் பக்கம் திரும்பி குட்பாய், மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்தார். இறுதியாக ராஷ்மிகா, ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் படம் வெளியானது. இதனிடையே, ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து டீப் பேக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்
இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், ஒரு நபரை கைது செய்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய ராஷ்மிகா, டீப் பேக் தொழில்நுட்பத்தால் தினந்தினம் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து அச்சப்படுவதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனக்கு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். நான் இதைக்குறித்து பேசினால், குறைந்தபட்சம் 41 மில்லியன் மக்களுக்காகவாது, டீப் பேக் குறித்த விழிப்புணர்வு சென்றடையும் என தெரிவித்துள்ளார்.